Last Updated:
இளம் பெண் ஒருவரைப் பிடித்து விசாரித்த போது, அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால், போலீசார் அவரின் உடைமைகளைச் சோதனை செய்தனர்.
சென்னையில் இருந்து மங்களூருவிற்கு உயர்தர ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்திய கல்லூரி மாணவி, போலீசாரிடம் சிக்கினார்.
கர்நாடகா மாநிலம் மங்களூரு முல்கி ரயில் நிலைய சாலை பகுதியில் கஞ்சா கடத்தப்படுவதாகத் தனிப்படை போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனால் முல்கி காவல்நிலைய அதிகாரிகள் அப்பகுதியில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தினர். அப்போது ரயில் நிலையத்திற்குள் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த இளம் பெண் ஒருவரைப் பிடித்து விசாரித்த போது, அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால், போலீசார் அவரின் உடைமைகளைச் சோதனை செய்தனர்.
அப்போது அந்த இளம்பெண்ணிடம் 35 லட்ச ரூபாய் மதிப்பிலான ஒரு கிலோ 42 கிராம் எடை கொண்ட ‘ஹைட்ரோபோனிக் கஞ்சா’ இருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக அவரை கைது செய்த போலீசார், இளம்பெண்ணிடம் இருந்து செல்போன் மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதனைத்தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் பிடிபட்ட இளம்பெண், சிவமொக்கா மாவட்டம் ஹூலி தேவரா பானா பகுதியைச் சேர்ந்த சுஹானா என்பது தெரியவந்தது. குந்தாப்புராவில் உள்ள கல்லூரி ஒன்றில் பி.சி.ஏ. இறுதி ஆண்டு படித்து வரும் மாணவி பணத்திற்காகப் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகவும், அதை சென்னையிலிருந்து வாங்கி வந்து மங்களூருவில் கைமாற்ற இருந்ததாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில், மங்களூரு நகரில் உள்ள வசதி படைத்தவர்களுக்கும், இளைஞர்களுக்கும் அதிக விலைக்கு உயர்ரக கஞ்சாவை விற்று லாபம் சம்பாதிக்கவும் கல்லூரி மாணவி சுஹானா திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து சுஹானா மீது போதைப் பொருள் தடுப்பு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவருக்குப் போதைப் பொருட்களை விற்பனை செய்த சென்னையில் உள்ள முக்கிய புள்ளிகள் யார்? மங்களூருவில் இதுபோல யாருடன் எல்லாம் அவர்கள் தொடர்பு வைத்திருக்கின்றனர்? என்பது குறித்த விசாரணையைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.
இதனையடுத்து, கைது செய்யப்பட்ட கல்லூரி மாணவி சுஹானா ஏற்கனவே போதைப் பொருள் கடத்தல் வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும் அவர் மீது பெங்களூரு சர்வதேச விமான நிலைய சுங்கத்துறையினரால் ஒரு கடத்தல் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தனிப்படை போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. விசாரணையின் முடிவில் சென்னையைச் சேர்ந்த பல முக்கிய பிரமுகர்கள் இதில் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகை நயன்தாராவின் கோலமாவு கோகிலா பட பாணியில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘கோலமாவு கோகிலா’ பட பாணியில் நடந்த ரியல் சம்பவம்.. போலீசில் இளம்பெண் சொன்ன பகீர் தகவல்கள்.. என்ன நடந்தது?


