கோலாலம்பூர்:
தனியார் கட்டணத் தொலைக்காட்சி நிறுவனமான அஸ்ட்ரோவின் (Astro) தரவுத்தளத்தில், சுமார் ஏழு ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக முறைகேடுகளில் ஈடுபட்டு வந்த முன்னாள் ஊழியருக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றம் இன்று அதிரடித் தீர்ப்பளித்தது.
அந்நிறுவனத்தில் பணியாற்றிய 49 வயதுடைய நோரா இடாயு ஜாபார் என்பவர் மீது, மொத்தம் 731 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. 2013 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில், நிறுவனத்தின் ‘வாடிக்கையாளர் மேலாண்மை அமைப்பை’ (Customer Management System) தவறாகப் பயன்படுத்தி, 731 சாதாரண சந்தாதாரர் கணக்குகளைச் சட்டவிரோதமாக நிறுவனக் கணக்குகளாக (Corporate Accounts) மாற்றியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
நீதிமன்றத்தில் இக்குற்றச்சாட்டுகளை வாசிப்பதற்கே சுமார் ஐந்து மணி நேரம் ஆனது. தன் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் நோரா இடாயு ஒப்புக்கொண்டார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இஸ்ராலிசாம் சனுசி, பிரதிவாதி தரப்பில் முன்வைக்கப்பட்ட குடும்பச் சூழல் மற்றும் மனநல பாதிப்புகளைக் கணக்கில் கொண்ட போதிலும், குற்றத்தின் தீவிரத்தைக் கருதி தண்டனையை உறுதி செய்தார்.
கணினி குற்றச் சட்டம் 1997-ன் கீழ், ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் தலா 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. எனினும், இந்தத் தண்டனைகளை ஏககாலத்தில் (Simultaneously) அனுபவிக்க நீதிபதி உத்தரவிட்டதால், அவர் 4 ஆண்டுகள் மட்டும் சிறையில் இருக்க நேரிடும்.
நிறுவனத்தின் நம்பிக்கைக்கு ஊறு விளைவித்ததும், நீண்டகாலமாக திட்டமிட்டு இம்முறைகேட்டைச் செய்ததும் இந்தத் தீர்ப்பிற்கான முக்கியக் காரணங்களாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.




