இராகவன் கருப்பையா – தமிழ் நாட்டின் புதிய முதலமைச்சராக சில தினங்களுக்கு முன் தேர்வு செய்யப்பட்ட நடிகர் விஜய்க்கு மலேசிய அரசியல் தலைவர்கள் போட்டா போட்டி போட்டுக் கொண்டு வாழ்த்து தெரிவிப்பது நமக்கு சற்று வியப்பாக உள்ளது.
எதிர்கட்சிக் கூட்டணியான பெரிக்காத்தானின் தலைமைச் செயலாளர், பாஸ் கட்சியைச் சேர்ந்த தக்கியுடின் கடந்த 11ஆம் தேதியன்று விஜய்க்கு வாழ்த்துத் தெரிவித்திருந்தார்.
அதன் பிறகு பி.கே.ஆர். கட்சியின் அனைத்துலக விவகாரங்களுக்கான தலைவர், முன்னாள் கல்வியமைச்சர் மஸ்லி மாலிக் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
அதே போல, “தமிழ் நாட்டு முதலமைச்சராக தேர்வு பெற்றுள்ள எனது நண்பர் விஜய்க்கு வாழ்த்துகள்,” என பிரதமர் அன்வார் ‘எக்ஸ்'(X) தளத்தில் பதிவு செய்திருந்தார்.
இவர்கள் அனைவரும் தமிழகம் மீதும் அதன் புதிய முதல்வர் விஜை மீதும் காட்டும் இந்தத் திடீர் பற்றும், பாசமும் பல கேள்விகளுக்கும் யூகங்களுக்கும் வித்திட்டுள்ளன.
ஏனெனில் நம் நினைவுக்கு எட்டிய வரையில் கடந்த காலங்களில் ஸ்தாலினுக்கோ, எடப்பாடி பழநிச்சாமிக்கோ, ஜெயலலிதாவுக்கோ நம் நாட்டின் முன்னணி அரசியல்வாதிகள் வாழ்த்துத் தெரிவித்ததாகத் தெரியவில்லை.
எனினும் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் சினிமா நட்சத்திரமுமான எம்.ஜி.ஆரைப் போல் அன்வாரை சித்தரிக்கும் சுவரொட்டிகளையும் பதாகைகளையும் கடந்த சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நம் நாட்டில் தேர்தல் காலங்களின் போது நாம் பார்த்திருக்கிறோம்.
அதே போல எம்.ஜி.ஆரின் புகழ்பெற்ற பாடலான, ‘நான் ஆணையிட்டால், அது நடந்துவிட்டால், இந்த ஏழைகள் வேதனை படமாட்டார்,’ எனும் பாடலுக்கு பிரச்சார மேடைகளில் அன்வார் நடனமாடியக் காட்சிகளையும் நாம் இன்னும் மறக்கவில்லை.
இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது, அடுத்து இங்கு வரவிருக்கும் தேர்தல்களில் விஜையின் செல்வாக்கு ஒரு பகடைகாயாக பயன்படுத்தப்படுமோ என்று நமக்கு எண்ணத் தோன்றுகிறது.
ஏனெனில் நம் சமூகத்தைச் சார்ந்த ஆயிரக் கணக்கானோர் விஜை மீது வைத்திருக்கும் கண்மூடித்தனமான மோகத்தை பிற இனத்தவரும் நன்கு அறிவார்கள். அவர்களில் நம் அரசியல் தலைவர்களும் அடங்குவர்.
கடந்த டிசம்பர் மாத பிற்பகுதியில் அவருடைய திரைப்படத்தின் ‘ஒலி குறுந்தகடு'(Audio CD) அறிமுக விழா தலைநகர் புக்கிட் ஜாலில் விளையாட்டரங்கில் நடைபெற்ற போது எவ்விதமான ஆதரவு அவருக்கு வழங்கப்பட்டது என்பது எல்லாருக்கும் தெரியும்.
மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பிடிக்கும் அளவுக்கு அவ்வரங்கில் கூட்டம் கூடியது என்று சொல்லப்படுகிறது. சாரை சாரையாக படையெடுத்து அங்கு குழுமியவர்களில் பலர் கடனை உடனை வாங்கி செலவு செய்து அங்கு வந்து சேர்ந்ததாக அப்போது பேசப்பட்டது.
தமிழகத்தில் சினிமாவையும் அரசியலையும் எப்படி பிரிக்க முடியாதோ, அதே போல மலேசியாவில் நம் சமூகத்தினரையும் சினிமாவையும் பிரிக்க முடியாது என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்துரைக்கும் அளவுக்கு ‘தளபதி திருவிழா’ எனும் அந்த நிகழ்ச்சி அமைந்தது.
நம்மிடையே இருக்கும் தீவிர போக்குடைய இந்த பொழுதுபோக்கு அம்சத்தைதான் அரசியல்வாதிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர் என்பது ‘உள்ளங்கை நெல்லிக்கனி’.
உள்நாட்டு அரசியல்வாதிகள் ஹொங்கொங் அல்லது தைவான் நாட்டு சினிமா நட்சத்திரங்களைப் போல வேடமிட்டு, ஆடிப்பாடி சீன சமூகக்தினரிடையே தேர்தல் பிரச்சாரங்கள் செய்ததாக நமக்குத் தெரியாது, கேள்விப்பட்டதும் இல்லை.
ஆக, நம் நாட்டில் எதிர்வரும் தேர்தல்களில் விஜையின் புகழையும் செல்வாக்கையும் முன்னிறுத்தி அரசியல்வாதிகள் நம் சமூகத்தினரிடையே வாக்கு வேட்டையில் ஈடுபடக்கூடிய சாத்தியம் உள்ளது என்பதை அண்மைய நகர்வுகள் புலப்படுத்துவதாகத் தெரிகிறது.

