ஓராண்டில் ஜனதா தள ஆட்சி கவிழ்ந்த நிலையில், 1991-ல் மீண்டும் அதே தொகுதியில் களம் இறங்கிய ரங்கசாமி, வெற்றிக் கனியை ருசித்து, வேளாண் துறை அமைச்சரானார்.
மேலும் யமஹா பைக்கில் சட்டமன்றத்திற்கு சென்று அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார். அதன்பிறகு, 1996, 2001 சட்டமன்றத் தேர்தல்களில் அடுத்தடுத்து வெற்றிகளை பெற்று, தொடர்ந்து அமைச்சரவையில் முக்கிய பொறுப்புகளை ரங்கசாமி கவனித்து வந்தார்.
2001ம் ஆண்டு, புதுச்சேரி முதலமைச்சராக இருந்த சண்முகம், தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, முதலமைச்சர் பதவி ரங்கசாமியை தேடி வந்தது.
முதலமைச்சர் அரியணையில் அமர்ந்த ரங்கசாமி, தன்னை யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம் என்று எழுதப்படாத விதியை நடைமுறைப்படுத்தினார்.
பெரும்பான்மை சமூகத்தை சார்ந்த ரங்கசாமி, புதுச்சேரியில் ஆதி திராவிட மக்களுக்கு சிறப்பு கூறு நிதியை உருவாக்கியது பரவலாக பாராட்டை பெற்றுத் தந்தது.
இதனால், அனைத்து தரப்பு மக்களிடமும் நன்மதிப்பை பெற்ற ரங்கசாமி, 2006-ல் 2 ஆவது முறையாக முதலமைச்சர் பொறுப்பை ஏற்றார். அப்போது காமராஜர் கல்வி உதவி திட்டத்தை அறிமுகப்படுத்திய ரங்கசாமி, அரசு இடங்களில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்விக்கு தேர்வாகும் மாணவர்களின் முழு கட்டணத்தையும் அரசு ஏற்கும் என்று அறிவித்தார்.
இந்நிலையில் காங்கிரஸில் இருந்த சில எம்.எல்.ஏ.-க்கள் ரங்கசாமிக்கு எதிராக போர் கொடி தூக்கியதால், 2008-ல் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
சில காலம் மவுனம் காத்து வந்த ரங்கசாமி, 2011 பிப்ரவரி மாதம் 7 ஆம் தேதி, அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கினார்.
புதுச்சேரியில் அதுவரை மாநில கட்சிகள் ஆட்சி அமைக்காத நிலையில், 2011 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 17 தொகுதிகளில் போட்டியிட்ட என்.ஆர்.காங்கிரஸ் 15 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
இருப்பினும் அதிமுகவை தவிர்த்து விட்டு, சுயேச்சை எம்.எல்.ஏ.-க்களின் ஆதரவுடன் தனித்து ஆட்சி அமைத்தார் ரங்கசாமி.
மத்திய அரசு மற்றும் துணைநிலை ஆளுநருடன் எப்போதும் இணக்கமாக செயல்படும் ரங்கசாமி, ஒவ்வொரு ஆட்சிக்காலத்திலும் உதவித்தொகை தொடர்ந்து அதிகரித்து வந்தார்.
2016-ல் தனித்து போட்டியிட்ட ரங்கசாமி, ஆட்சியை பிடிக்க முடியாத நிலையில், எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தை பெற்றார்.
2021-ல் பாஜகவுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்ற ரங்கசாமி, 4 ஆவது முறையாக மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை அதிகரிப்பு, கல்விக்கு கூடுதல் நிதி என பல்வேறு திட்டங்களை ரங்கசாமி செயல்படுத்தினார்.
இதன் மூலம், இதுவரை 17 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்துள்ள ரங்கசாமி, புதுச்சேரி வரலாற்றில் 5 ஆவது முறையாக அப்பதவியை வகிப்பவர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

