இந்த MIRV தொழில்நுட்பத்தின் சிறப்புகள் என்ன?
இதுவரை இந்தியாவிடம் இருந்த ஏவுகணைகள் ஒரே ஒரு இலக்கை மட்டுமே தாக்கும் திறன் கொண்டவை. ஆனால், MIRV தொழில்நுட்பத்தின் மூலம், ஒரு ஏவுகணையில் பல Nuclear Warheads-யை பொருத்த முடியும். இவை விண்வெளியில் இருந்து பிரிந்து சென்று, வெவ்வேறு திசைகளில் உள்ள பல இலக்குகளை ஒரே நேரத்தில் தாக்கும். எதிரி நாடுகளின் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள் ஒரே நேரத்தில் வரும் பல இலக்குகளைக் கணித்துத் தடுப்பது மிகவும் கடினம். அக்னி – 5 ஏவுகணை 5,000 கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டது. இதன் மூலம் பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகள் முழுவதையும் ஐரோப்பாவின் சில பகுதிகளையும் தாக்க முடியும். மணிக்கு 29,400 கிலோ மீட்டர் வேகத்தில் பாய்ந்து நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை தாக்கக் கூடியது.
ஏவுகணையின் மிகவும் சிறந்த அம்சம் Canister Launch…!
இந்த ஏவுகணையை ஒரு உருளைப் பெட்டிக்குள் வைத்து லாரிகள் அல்லது ரயில்கள் மூலம் எளிதாக ஓரிடத்தில் இருந்து வேறிடத்திற்கு நகர்த்த முடியும். இந்த முறையானது, போர் காலங்களில் ஏவுகணையைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும், ரகசியமாக ஏவவும் உதவும். மிஷன் திவ்யாஸ்த்ரா வெற்றியின் மூலம், MIRV தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ள மிகச்சில நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைந்துள்ளது. இதற்கு முன் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் மட்டுமே இந்தத் தொழில்நுட்பத்தை வைத்திருந்தன.
எம்.ஐ.ஆர்.வி (MIRV) தொழில்நுட்பத்தின் ஏவுகணை
அமெரிக்காவின் MIRV ஏவுகணை:
அமெரிக்காதான் உலகில் முதன்முதலில் MIRV தொழில்நுட்பத்தை உருவாக்கிப் பயன்படுத்திய நாடாகும். அமெரிக்காவின் தற்போதைய அணு ஆயுத பலத்தில் இந்த MIRV ஏவுகணைகள் மிக முக்கியமானவை. அதில் முதல் இடம் பிடிப்பது மினட்மேன் (Minuteman) III என்ற தரைவழி ஏவுகணை. இது அமெரிக்காவின் நிலப்பரப்பில் உள்ள ஏவுதளங்களில் இருந்து ஏவப்படும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஆகும். 1970-ல் முதன்முதலில் பயன்பாட்டிற்கு வந்த இதுதான் உலகின் முதல் MIRV ஏவுகணை. ஒரு ஏவுகணையில் 3 அணுக்கரு Warheads-களை சுமந்து சென்று வெவ்வேறு இலக்குகளைத் தாக்க முடியும்.
Trident II எனப்படும் நீர்மூழ்கிக் கப்பல் ஏவுகணை:
இந்த ஏவுகணை அமெரிக்கக் கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்து ஏவப்படும் ஏவுகணையாகும். அமெரிக்காவின் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் துல்லியமான ஏவுகணையாகக் கருதப்படுகிறது. இந்த ஏவுகணை அதிகபட்சமாக 8 முதல் 12 போர்முனைகள் வரை சுமந்து செல்லும் திறன் கொண்டது. 12,000 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் சென்று தாக்கக்கூடியது. Trident கடலுக்கு அடியிலிருந்து ஏவப்படுவதால், எதிரிகளால் இதைக் கண்டறிவது கடினம். இதன் ஆயுட்காலத்தை 2040-ஆம் ஆண்டு வரை நீட்டிக்க ‘Trident II D5LE’ என்ற நவீனமயமாக்கல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ரஷ்யாவின் MIRV ஏவுகணை:
அமெரிக்காவை காட்டிலும், உலகிலேயே மிகவும் வலிமைமிக்க மற்றும் பல்வேறு வகையான MIRV ஏவுகணைகளைக் கொண்டுள்ள நாடு ரஷ்யா. எதிரி நாடுகளின் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளை மீறிச் செல்லும் வகையில் ரஷ்யா தனது ஏவுகணைகளை வடிவமைத்துள்ளது. ரஷ்யாவின் மிக முக்கியமான MIRV ஏவுகணை RS-28 Sarmat இதனை நேட்டோ நாடுகள் Satan என அழைக்கின்றன. அவ்வளவு ஆபத்தானது.
Sarmat ஏவுகணை:
இது உலகின் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் பெரிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஆகும். இந்த ஒரு ஏவுகணையால் 10 முதல் 15 Warheads-யை சுமந்து செல்ல முடியும். வட துருவம், தென் துருவம் என எந்தத் திசையிலும் சுற்றி வந்து தாக்கக்கூடியது. அமெரிக்கா வைத்துள்ள தற்போதைய பாதுகாப்பு அமைப்புகளால் இதைத் தடுப்பது கடினம். இதேப்போல் RS-24 Yars, RSM-56 Bulava, Oreshnik உள்ளிட்ட
MIRV தொழில்நுட்பத்துடன் ஏவுகணை
திறன் கொண்ட பல ஏவுகணைகள் ரஷ்யா வைத்துள்ளது. சீனா, பிரான்ஸ், பிரிட்டன் நாடுகளும் MIRV தொழில்நுட்பத்துடன் கூடிய ஏவுகணைகளை வைத்துள்ளன.
அக்னி-5 (Agni-V) ஏவுகணையை, ‘மிஷன் திவ்யாஸ்த்ரா’ மூலம் இந்தியா பரிசோதித்ததன் பின்னணியில் மிக முக்கியமான ராணுவ மற்றும் அரசியல் காரணங்கள் உள்ளன. இந்தியாவின் அணு ஆயுதக் கொள்கை No First Use என்பதாகும். அதாவது, இந்தியா ஒருபோதும் முதலில் அணு ஆயுதத்தைத் தாக்கப் பயன்படுத்தாது. ஆனால், எதிரி நாடுகள் தாக்கினால், மிகக் கடுமையான பதிலடி கொடுக்கும் திறனை இந்தியா வைத்திருக்க வேண்டும் என்பது. அக்னி-5 சோதனையின் மூலம், எதிரி எவ்வளவு பெரிய தாக்குதலை நடத்தினாலும், இந்தியாவின் Second Strike மிக வலிமையாகவும், தவிர்க்க முடியாததாகவும் இருக்கும் என்பதை இந்தியா உலகிற்கு உணர்த்தியுள்ளது.
இதற்கு முன் இந்தியாவிடம் இருந்த அக்னி ஏவுகணைகள் பாகிஸ்தானை முழுமையாகவும், சீனாவின் சில பகுதிகளையும் மட்டுமே எட்டும் திறன் கொண்டிருந்தன. அக்னி-5 ஏவுகணை 5,000 கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரம் செல்லக்கூடியது. இதன் மூலம் சீனாவின் வடக்கு எல்லை வரை உள்ள அனைத்து முக்கிய நகரங்கள் மற்றும் ராணுவத் தளங்களை இந்தியாவால் இலக்கு வைக்க முடியும். சீனா தனது வான்வெளியில் அதிநவீன ஏவுகணை தடுப்பு அமைப்புகளை நிறுவியுள்ளது. ஒரே ஒரு Warhead-ஐ கொண்ட ஏவுகணையை அவர்கள் எளிதாகத் தடுத்துவிடலாம்.
மிஷன் திவ்யாஸ்த்ரா திட்டம்:
ஆனால், ‘மிஷன் திவ்யாஸ்த்ரா’ மூலம் சோதிக்கப்பட்ட MIRV தொழில்நுட்பம், ஒரே ஏவுகணையில் இருந்து பல போர்முனைகளை வெவ்வேறு இலக்குகளுக்கு அனுப்பும். இதனால் சீனாவின் பாதுகாப்பு அரண்கள் ஒரே நேரத்தில் பல தாக்குதல்களைச் சமாளிக்க முடியாமல் திணறும். இந்தியாவின் அணு ஆயுத பலம் சீன, ரஷ்ய நாடுகளை விடக் குறைவு. ஆனால் MIRV தொழில்நுட்பம் இருந்தால், குறைந்த எண்ணிக்கையிலான ஏவுகணைகளைக் கொண்டே எதிரி நாட்டின் பல இலக்குகளை ஒரே நேரத்தில் அழிக்க முடியும். இது இந்தியாவின் ராணுவத் திறனைப் பன்மடங்கு உயர்த்துகிறது. அக்னி- 5 ஏவுகணையில் பயன்படுத்தப்பட்டுள்ள சென்சார்கள், வழிகாட்டுதல் அமைப்புகள் மற்றும் ஏவுகணை பிரிந்து செல்லும் தொழில்நுட்பங்கள் அனைத்தும் DRDO மூலம் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டவை. இது உலக நாடுகளுக்கு இந்தியாவின் விண்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழில்நுட்ப வலிமையை எடுத்துரைக்கிறது.

இந்தச் சோதனையின் மூலம், MIRV தொழில்நுட்பம் கொண்ட அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகிய ஐந்து நாடுகளின் ‘எலைட்’ குழுவில் இந்தியா இணைந்துள்ளது. இது ஆசியப் பிராந்தியத்தில் இந்தியாவின் செல்வாக்கை அதிகரிப்பதோடு, உலகளாவிய பாதுகாப்பு விவகாரங்களில் இந்தியாவின் குரலை வலுப்படுத்தும். “எங்களைத் தாக்க நினைத்தால், உங்களின் எந்தப் பாதுகாப்பு அரணாலும் எங்களைத் தடுக்க முடியாது” என்ற எச்சரிக்கையை எதிரி நாடுகளுக்குத் தெளிவுபடுத்துவதே மிஷன் திவ்யாஸ்த்ராவின் முக்கிய நோக்கம்.
யார் இந்த விஞ்ஞானி ஷீனா ராணி?
மிஷன் திவ்யாஸ்த்ராவில் மற்றொரு முக்கியமான அம்சம் இதன் திட்ட இயக்குநர் பற்றியது. விஞ்ஞானி ஷீனா ராணி தலைமையிலான குழுவினர் அக்னி 5 ஏவுகணை வெற்றிகரமாக சோதித்து வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளனர். ஷீனா ராணி ‘மிஷன் திவ்யாஸ்த்ரா’ திட்டத்தின் பின்னணியில் இருந்த மிக முக்கியமான ஆளுமை மற்றும் இந்தியப் பாதுகாப்புத் துறையின் பெருமைக்குரிய விஞ்ஞானி. ஷீனா ராணி ஹைதராபாத்தில் உள்ள Advanced Systems Laboratory-யில் மூத்த விஞ்ஞானியாகப் பணியாற்றி வருகிறார்.
2024- ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற முதற்கட்ட அக்னி-5 ஏவுகணைச் சோதனையின் திட்ட இயக்குநராக செயல்பட்டார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். புகழ்பெற்ற College of Engineering Trivandrum கல்லூரியில் Computer Science பிரிவில் பட்டம் பெற்றவர். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ISRO-வில் எட்டு ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஏவுகணைகள் விண்வெளியில் துல்லியமாகப் பாதையை மாற்றிக் கொள்வதற்கான மென்பொருள் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளை உருவாக்குவதில் ஷீனா ராணி நிபுணர்.
இந்தியாவின் Missile Women ஷீனா ராணி!
அக்னி-5 ஏவுகணை விண்வெளியில் இருந்து மீண்டும் வளிமண்டலத்திற்குள் நுழையும்போது, அதிலுள்ள பல Warheads- சை துல்லியமாகப் பிரித்து வெவ்வேறு இலக்குகளுக்கு அனுப்பும் சிக்கலான தொழில்நுட்பத்தை வடிவமைப்பதில் இவரது தலைமையிலான குழு பெரும் வெற்றி பெற்றது. இந்தியாவின் ‘ஏவுகணை மனிதர்’ என்று டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அழைக்கப்படுவது போல, அக்னி ஏவுகணைத் திட்டங்களில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் ஷீனா ராணி இந்தியாவின் ‘மிசைல் வுமன்’ என்று அழைக்கப்படுகிறார். பெண்கள் பெரும்பாலும் கடினமான ராணுவப் பணிகளுக்குப் பொருத்தமானவர்கள் அல்ல என்ற பிம்பத்தை உடைத்து, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைத் திட்டத்தை வெற்றிகரமாக வழிநடத்தியது இவரது மிகப்பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது. ஷீனா ராணியின் தலைமையின் கீழ் உருவான இந்தத் தொழில்நுட்பம்தான் இன்று இந்தியாவை உலகின் 6-வது வலிமையான MIRV நாடாக மாற்றியுள்ளது.
Missile Women ஷீனா ராணி
‘மிஷன் திவ்யாஸ்த்ரா’வின் சாதனை!
‘மிஷன் திவ்யாஸ்த்ரா’ நவீன இந்தியாவின் அறிவியல் மற்றும் ராணுவத் தற்சார்பின் மிகப்பெரிய சாதனை. 5,000 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் பாயும் வலிமை, ஒரே ஏவுகணையில் பல இலக்குகளைத் தாக்கும் MIRV தொழில்நுட்பம் என அக்னி-5 இந்தியாவின் பாதுகாப்பை அசைக்க முடியாத ஒரு நிலைக்கு உயர்த்தியுள்ளது. இந்த வெற்றியின் மூலம், உலகின் மிகச்சில வல்லரசு நாடுகளின் வரிசையில் இந்தியா இணைந்திருப்பதோடு, ஆசியப் பிராந்தியத்தில் Credible Deterrent- ஆக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. ஷீனா ராணி போன்ற அர்ப்பணிப்புமிக்க பெண் விஞ்ஞானிகளின் தலைமையின் கீழ் உருவான இந்தத் தொழில்நுட்பம், “யாரையும் தாக்குவதற்காக அல்ல, யாராலும் தாக்கப்படாமல் இருக்கவே” என்பதை இந்தியா உலகிற்குத் தெளிவுபடுத்தியுள்ளது.

