தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக, ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் தியகல பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
‘திட்வா’ புயல் தாக்கத்தின் போது வட்டவளை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் கொட்டிக்கிடந்த மண் மேடுகள் ஏற்கனவே வெட்டி அகற்றப்பட்டிருந்தன. இந்த நிலையில், குறித்த பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (10) மாலை பெய்த கடும் மழை காரணமாக, மீண்டும் அதே இடத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
மண்சரிவு ஏற்பட்டுள்ள பகுதியில் தற்போது போக்குவரத்து ஒரு வழிப்பாதையாக (Single Lane) மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. “சம்பவ இடத்திலுள்ள இடிபாடுகளை உடனடியாக அகற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்,” என நோர்வூட் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்று பொறியாளர் தெரிவித்தார்.
குறித்த வீதியை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் பயணிக்குமாறு நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

