கடந்த மாதம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது நிர்வாகத்தின் உயர்மட்ட அதிகாரிகளை குறிவைத்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் பின்னணியில், அமெரிக்க-ஈரான் இடையிலான போர் பதற்றங்கள் ஒரு காரணமாக இருந்திருக்கலாம் என்று அமெரிக்க உளவுத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் வொஷிங்டனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு விருந்தின் போது ஜனாதிபதி ட்ரம்ப் மீது தாக்குதல் நடத்த முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள கோல் ஆலன் என்ற நபரின் சமூக மற்றும் அரசியல் அதிருப்திகள் குறித்து அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) ஆய்வு செய்துள்ளது.
அதன் ஆரம்பக்கட்ட அறிக்கையின்படி, ஈரானுடனான அமெரிக்காவின் மோதல் போக்கு, இந்தத் தாக்குதலை நடத்த அவருக்கு ஒரு தூண்டுதலாக இருந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிதாரியின் அதிருப்தி
தாக்குதலுக்குப் பிறகு ஆலனின் சமூக ஊடகப் பக்கங்களை ஆய்வு செய்த புலனாய்வுத் துறையினர், அவர் ஈரானுடனான போரில் அமெரிக்காவின் நடவடிக்கைகளைத் தீவிரமாக விமர்சித்து வந்ததைக் கண்டறிந்துள்ளனர்.

குறிப்பாக, ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலிவாங்கும் இந்தப் போர் மற்றும் அதன் விளைவாக உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சரிவு ஆகியவை குறித்த தனது அதிருப்தியை அவர் பதிவிட்டுள்ளார்.
ரஷ்யா-உக்ரைன் போர்
இவையே அவர் துப்பாக்கிச் சூடு நடத்த முடிவெடுத்ததற்கு முக்கியக் காரணமாக இருந்திருக்கலாம் என உளவுத்துறை மதிப்பிட்டுள்ளது.

Image Credit: CNN
அவர் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ஈரான் விவகாரம் மட்டுமின்றி குடியேற்றக் கொள்கை, எலான் மஸ்க் மற்றும் ரஷ்யா-உக்ரைன் போர் தொடர்பான அவரது மாறுபட்ட கருத்துகளையும் எஃப்பிஐ தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

