உலகின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான மெக்சிகோ சிட்டி கற்பனை செய்ய முடியாத வேகத்தில் பூமிக்குள் மூழ்கி வருவதாக நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவின் இஸ்ரோ மற்றும் நாசா இணைந்து அனுப்பிய நிசார் செயற்கைக்கோளின் தரவுகள் மூலம் இந்த அதிர்ச்சிகரமான உண்மை தெரிய வந்துள்ளது.
நாசாவின் சமீபத்திய ஆய்வின்படி, மெக்சிகோ சிட்டியின் சில பகுதிகள் மாதத்திற்கு சுமார் 2 செ.மீ. வேகத்தில் மூழ்கி வருகின்றன. அதாவது, ஒரு ஆண்டில் சுமார் 25 செ.மீ. வரை நிலம் பூமிக்குள் இறங்குகிறது. கடந்த நூற்றாண்டில் மட்டும் இந்த நகரம் சுமார் 39 அடி (12 மீட்டர்) பூமிக்குள் இறங்கியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நகரத்தின் குடிநீர் தேவைக்காக 60 சதவீத நிலத்தடி நீர் அளவுக்கு அதிகமாக உறிஞ்சப்படுவதால், பூமிக்குக் கீழே உள்ள களிமண் தளம் சுருங்கி நிலம் மூழ்குகிறது. இந்த நகரம் ஒரு பழைய ஏரியின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீர் அதிகளவில் உறிஞ்சப்படும் போது, அந்த ஏரிப் படுகை பலமிழந்து நகரத்தைத் தாங்கும் திறனை இழந்து வருகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பிரம்மாண்டமான கட்டிடங்களின் எடையும் இந்த நிலச்சரிவை வேகப்படுத்துகிறது.
நிலம் ஒருமுறை சுருங்கத் தொடங்கிவிட்டால், அந்தச் செயல்முறை பெரும்பாலும் மீள முடியாததாகிவிடும். அதாவது, நிலத்தடி நீர் மட்டம் மீட்டெடுக்கப்பட்டாலும் கூட, நகரம் தனது அசல் உயரத்தை மீண்டும் பெற முடியாது என்று நாசா ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். Benito Juárez International Airport நகரத்திலேயே மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட இடமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. நகரின் பல பகுதிகளில் சாலைகள் பிளவுபடுவது, குடிநீர் குழாய்கள் உடைவது மற்றும் பல நூற்றாண்டுகள் பழமையான தேவாலயங்கள் ஒருபுறமாகச் சாயத் தொடங்கியுள்ளன.மேலும், “டே ஜீரோ” எனப்படும் தண்ணீர் இல்லாத நிலையை நோக்கி இந்த நகரம் சென்று கொண்டிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.




