இலங்கையின் பல்வேறு கடற்கரைப் பகுதிகளில் கடந்த ஏப்ரல் (2026) மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட உயிர்காப்பு நடவடிக்கைகளின் போது, நீரில் மூழ்கவிருந்த 19 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை இலங்கை கடலோர பாதுகாப்புப் படை (SLCG) வெற்றிகரமாக மீட்டுள்ளது.
நாட்டின் முக்கிய சுற்றுலாத் தலங்களைக் கொண்ட கடற்கரைப் பகுதிகளில் இலங்கை கடலோர பாதுகாப்புப் படையினரால் 16 உயிர்காப்பு நிலையங்கள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையங்களில் கடமையாற்றும் உயிர்காப்பு வீரர்களால் கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 14 வெளிநாட்டவர்களும், 5 உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளும் நீரில் மூழ்கவிருந்த நிலையில் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்டவர்களில் ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, ரஷ்யா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த 05 முதல் 62 வயதுக்குட்பட்ட ஆண் மற்றும் பெண் சுற்றுலாப் பயணிகள் அடங்குகின்றனர்.
2010 ஆம் ஆண்டு நிறுவப்பட்டதிலிருந்து, 2026 ஏப்ரல் 30 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 1,221 வெளிநாட்டவர்கள் உட்பட மொத்தம் 2,629 பேரை இலங்கை கடலோர பாதுகாப்புப் படை உயிர்காப்பு வீரர்கள் வெற்றிகரமாக மீட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


