அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பேச்சுவார்த்தைகள் தற்சமயம் முடங்கியுள்ளதாகத் தெரிவதாக இராணுவ மற்றும் இராஜதந்திர ஆய்வாளர் அலெக்ஸாண்ட்ரு ஹுடிஸ்டெனு (Alexandru Hudisteanu) தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகமொன்றிற்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இரு தரப்பினரும் தங்களின் அடிப்படை நிலைப்பாடுகளில் இருந்து இறங்கி வர மறுப்பதே இந்த முட்டுக்கட்டைக்குக் காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அணுசக்தி ஒப்பந்தம்
குறிப்பாக, ஹார்முஸ் நீரிணை விவகாரத்தை அணுசக்தி திட்ட விவகாரத்திலிருந்து பிரிக்க ஈரான் முயற்சிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பேச்சுவார்த்தையின் போக்கு குறித்து விவரித்த ஹுடிஸ்டெனு, ஈரான் இப்போதே தனது நடத்தையை மாற்றிக்கொள்ள வேண்டும் அதற்கான பலன்களைப் பிறகு பெற்றுக்கொள்ளலாம் என்று அமெரிக்கா விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும் ஈரானோ பலன்களை இப்போதே பெற்றுக்கொண்டு அணுசக்தி ஒப்பந்தம் உள்ளிட்ட விவாதங்களைப் பிறகு வைத்துக்கொள்ளலாம் என விரும்புகிறது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தவறான கணக்கீடுகள்
இந்தநிலையில், இரு நாடுகளும் தங்களுக்குச் சாதகமான முன்னெடுப்புகளை முதலில் எதிர்பார்க்கும் இத்தகைய முரண்பட்ட அணுகுமுறை, இராஜதந்திர ரீதியிலான தீர்வுகளை எட்டுவதில் பெரும் தடையாக இருந்து வருவதாக விமர்சிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், அமெரிக்காவும் ஈரானும் தங்களது மோதல்களைக் கடல்சார் எல்லைகளுக்குள்ளேயே (Maritime domain) கட்டுப்படுத்தியுள்ளதால் பெரிய அளவிலான தவறான கணக்கீடுகள் அல்லது நேரடிப் போர் ஏற்படும் அபாயம் குறைந்துள்ளதாக ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான முக்கிய இடமாகக் கடல்சார் பகுதி மாறியுள்ள போதிலும் அந்த நடவடிக்கைகள் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு உட்பட்டே நடத்தப்படுவதாக அவர் விவரித்துள்ளார்.
இந்த மட்டுப்படுத்தப்பட்ட மோதல் போக்கு, தற்போதைக்கு ஒரு முழு அளவிலான பிராந்தியப் போர் வெடிப்பதைத் தடுத்து வருவதாக ஆய்வாளர்கள் கருதுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

