பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், தனது பதவிக்காலம் முடிவடைந்ததும் அரசியலில் இருந்து முழுமையாக விலகப் போவதாகத் தெரிவித்துள்ளார். அவரின் பதவிக்காலம் முடிவடைய இன்னும் சரியாக ஓராண்டே உள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு, தனது 39ஆவது வயதில் முதன்முறையாக ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் மேக்ரான். பிரான்ஸ் அரசியல் வரலாற்றிலேயே மிக இளம் வயதில் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற பெருமை இவருக்கு உண்டு. அதனைத் தொடர்ந்து, 2022ஆம் ஆண்டு அவர் இரண்டாவது முறையாகப் பிரான்ஸ் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பிரான்ஸின் அரசியல் சாசனத்தின்படி, ஒரு நபர் மூன்றாவது முறையாக ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட முடியாது. இதன் காரணமாக, 2027ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள அடுத்த ஜனாதிபதி தேர்தலில் மேக்ரான் போட்டியிட முடியாத நிலை உள்ளது.
ஐரோப்பியக் கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்பதற்காகச் சைப்ரஸ் தீவுக்குச் சென்றிருந்த மேக்ரான், அதன் தலைநகரான நிகோசியாவில் (Nicosia) மாணவர்களிடையே உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “நான் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன் அரசியலில் ஈடுபடவில்லை; அதேபோல் என் பதவிக்காலம் முடிந்த பின்னரும் நான் அரசியலில் ஈடுபட மாட்டேன்,” என்று திட்டவட்டமாகக் கூறினார்.
மேக்ரானின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, அவர் தனது பதவிக்காலத்திற்குப் பிறகு அரசியலுக்கு முழுக்குப் போட இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


