Last Updated:
3 ஆவது ஓவரின் 3 ஆவது பந்தை அக்சர் படேல், பிரியன்ஷ் ஆர்யாவுக்கு வீசியபோது அவர் அடித்த பந்தை லுங்கி இங்கிடி பிடிக்க முயன்றார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியின்போது டெல்லி அணியின் வீரர் லுங்கி இங்கிடி கேட்ச் பிடிக்க முயன்ற போது காயம் அடைந்தார். இதையடுத்து அவர் ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்டது அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகள் டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்துள்ள டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 264 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணியின் கே.எல்.ராகுல் 67 பந்துகளில் 9 சிக்சர் 16 பவுண்டரியுடன் 152 ரன்கள் குவித்தார்.
நிதிஷ் ராணா 44 பந்துகளில் 4 சிக்சர் 11 பவுண்டரியுடன் 91 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பஞ்சாப் அணியின் வீரர்கள் களமிறங்கி விளையாடி வருகின்றனர்.
இந்த நிலையில் 3 ஆவது ஓவரின் 3 ஆவது பந்தை அக்சர் படேல், பிரியன்ஷ் ஆர்யாவுக்கு வீசியபோது அவர் அடித்த பந்தை லுங்கி இங்கிடி பிடிக்க முயன்றார். அப்போது அவர் பின்புறமாக டைவ் அடித்தபோது அவரது தலையின் பின் பகுதி தரையில் பலமாக மோதியது.
இதையடுத்து எந்த அசைவும் இல்லாமல் மைதானத்தில் இருந்த அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. தொடர்ந்து அசைவில்லாமல் அவர் இருந்த நிலையில், உடனடியாக ஆம்புலன்ஸ் கொண்டுவரப்பட்டு அவரை மருத்துவ பணியாளர்கள் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
இந்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

