
எஸ். சதீஸ்
பலாங்கொடையிலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்றின் சக்கரம் உடைந்ததன் காரணமாக, பொகவந்தலாவ – பலாங்கொடை வீதியின் போக்குவரத்து சுமார் 7 மணித்தியாலங்கள் பாதிக்கப்பட்டதாகப் பொகவந்தலாவ போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் வியாழக்கிழமை (23.04.2026) முற்பகல் 11 மணியளவில் பொகவந்தலாவ, பெற்றோசோ பகுதியில் இடம்பெற்றுள்ளது.
பேருந்தின் முன்பக்கத் டயர் பொருத்தப்பட்டிருந்த சக்கரம் திடீரென உடைந்ததால், பேருந்து வீதியின் நடுவே செயலிழந்து நின்றது. இதனால் அந்த வீதி வழியான போக்குவரத்து முழுமையாகப் பாதிக்கப்பட்டது. இச்சம்பவத்தின் போது பேருந்தில் பயணித்த பயணிகள் எவருக்கும் எவ்விதக் காயங்களும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து, பலாங்கொடை பகுதியிலிருந்து ‘பெக்கோ’ இயந்திரம் ஒன்று வரவழைக்கப்பட்டு, வீதியில் நின்ற பேருந்து அகற்றப்பட்டது. சுமார் 7 மணித்தியாலப் போராட்டத்திற்குப் பின்னர் போக்குவரத்து மீண்டும் வழமைக்குத் திரும்பியதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த வீதித் தடை காரணமாக, குறித்த வீதியினூடாகப் பயணிக்கவிருந்த ஏனைய வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.








