இந்தியாவிற்கு மூன்று நாள் பயணமாக வந்திருந்த தென்கொரிய அதிபர் லீ ஜே-மியுங்கிற்கு (Lee Jae-myung) ஏப்ரல் 20-ம் தேதி ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருந்து ஏற்பாடு செய்திருந்தார்.
அரசியல் மற்றும் கலைத்துறையைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். இதில் சிறப்பு அழைப்பாளராக நடிகை பிரியங்கா மோகன் பங்கேற்றார்.
சமீபத்தில் பிரியங்கா மோகன் நடிப்பில் “மேட் இன் கொரியா’ திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. அத்திரைப்படத்தின் பெரும்பகுதி கொரியாவிலேயே படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ராஷ்டிரபதி பவனில் நடந்த நிகழ்வு தொடர்பாக டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் பேசியிருக்கிறார் பிரியங்கா மோகன். அதில், “இது முற்றிலும் எதிர்பாராத ஒன்று. ராஷ்டிரபதி பவன் உள்ளே எப்படி இருக்கும் என்று எப்போதும் வியந்ததுண்டு.
அங்கிருந்த அமைதியான சூழலையும், மரியாதையையும் ரசித்தேன். பல முக்கியப் பிரமுகர்களுடன் அமர்ந்து உணவு அருந்துவது ஒரு கனவு போல இருந்தது.
