கோலா கிராய்:
கிளந்தான், டாபோங் பகுதியில் உள்ள நீர்மின் திட்ட கட்டுமான இடத்தில் (Hydropower Project Site) கடந்த திங்கட்கிழமை நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த அதிரடிச் சோதனையில், செல்லுபடியாகும் ஆவணங்களின்றி தங்கியிருந்த 114 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.


கடந்த திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் தொடங்கிய இந்தச் சோதனையில், குடிநுழைவுத் துறையைச் சேர்ந்த 65 அதிகாரிகளும், மலேசியக் காவல்துறை (PDRM), தொழிலாளர் துறை (JTK), தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை (DOSH), தேசியப் பதிவுத் துறை (JPN) ஆகிய இதர அரசு நிறுவனங்களைச் சேர்ந்த 56 பணியாளர்களும் இணைந்து இந்த நடவடிக்கையில் பங்கேற்றனர் என்று, கிளந்தான் மாநில குடிநுழைவுத் துறை துணை இயக்குநர் நிக் அக்தருல்ஹக் நிக் அப்துல் ரஹ்மான் கூறினார்.
கட்டுமான இடத்தில் தங்கியிருந்த மொத்தம் 311 வெளிநாட்டவர்களிடம் சோதனையிடப்பட்டது. அவர்களில் 114 பேர் உரிய ஆவணங்கள் இன்றி இருந்தது கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டனர்.


கைது செய்யப்பட்டவர்கள் பங்களாதேஷ், பாகிஸ்தான், மியன்மார், இந்தோனேசியா மற்றும் சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். இவர்கள் முறையான பயண ஆவணங்கள் இன்றி நாட்டிற்குள் நுழைந்தது மற்றும் தங்கியிருந்தது போன்ற குடிவரவு விதிமீறல்களில் ஈடுபட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட அனைவரும் மேலதிக விசாரணைக்காகக் கிளந்தான் குடிநுழைவு தடுப்பு முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இவர்கள் மீது 1959/63 குடிநுழைவுச் சட்டத்தின் பிரிவு 6(1)(c) மற்றும் பிரிவு 15(1)(c) ஆகியவற்றின் கீழ் விசாரணை நடைபெற்று வருகிறது.
சட்டவிரோதத் தொழிலாளர்கள் மற்றும் கள்ளக் குடியேறிகளைக் கண்டறிய மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இத்தகைய சோதனைகள் தொடரும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.




