அதற்காக எல்லா நிலநடுக்கமும் சுனாமியை ஏற்படுத்துமா என்றால், இல்லை என்பதே பதில். சர்வதேச சுனாமி தகவல் மையம் மற்றும் NOAA-வின்படி, நிலநடுக்கம் கடலுக்கு அடியிலோ அல்லது கடற்கரைக்கு மிக அருகிலோ, அதுவும் 7.5 அல்லது அதற்கும் அதிகமான ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டாலோ, அதிலும் கடலின் தரையை நகர்த்தும் அளவுக்கு ஆழமற்ற பகுதியிலோ (70 கி.மீ-க்கு உள்ளாக) நிலநடுக்கம் ஏற்பட்டால்தான் அது சுனாமியாக மாறும். எல்லாவற்றிற்கும் மேலாக, நிலத்தட்டுகள் கிடைமட்டமாக நகராமல், செங்குத்தாக (மேல்நோக்கி அல்லது கீழ்நோக்கி) இடம்பெயர்ந்தால் மட்டுமே கடல் நீர் பெருமளவில் தள்ளப்பட்டு சுனாமி அலைகள் உருவாகும்.


