
இந்தியாவின் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், தனது இருநாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தின் பகுதியாக இன்று கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்தில் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்தார்.
இந்தியாவின் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், தனது இருநாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தின் பகுதியாக இன்று கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்தில் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்தார்.
இந்த சந்திப்பில், இந்தியா–இலங்கை உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு தரப்பும் பயனுள்ள மற்றும் விரிவான கலந்துரையாடல்களை மேற்கொண்டதாக இந்திய வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வரலாறு, கலாசாரம் மற்றும் மக்கள் உறவுகளை அடிப்படையாகக் கொண்ட இருநாடுகளின் நெருங்கிய தொடர்புகளை மேலும் ஆழப்படுத்துவது குறித்து முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.
இந்த சந்திப்பின்போது, இந்தியாவின் “அக்கம் பக்கத்திற்கு முன்னுரிமை” கொள்கைக்கு இந்திய துணை ஜனாதிபதி மீண்டும் உறுதிப்பாடு அளித்ததுடன், இரு நாடுகளுக்கும் பயன் தரும் வகையில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
மேலும், இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் இந்திய வீடமைப்பு திட்டம் உள்ளிட்ட பல அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
குறிப்பாக, டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்காக அமல்படுத்தப்பட்ட 450 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான உதவித் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது.
இந்த விஜயத்தின் ஒரு பகுதியாக, சி.பி. ராதாகிருஷ்ணன், இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளார். மேலும், இந்திய வம்சாவளி தமிழர்கள் அதிகம் வசிக்கும் நுவரெலியா பகுதிக்கும் விஜயம் மேற்கொள்ள உள்ளார்.
அங்கு, இந்தியாவின் வீடமைப்பு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட குடியிருப்புகள் பார்வையிடப்படுவதுடன், அப்பகுதி மக்களுடன் நேரடியாக கலந்துரையாடலும் இடம்பெறும். கூடுதலாக, நுவரெலியாவில் உள்ள சீதா அம்மன் கோவில்வும் பார்வையிடப்பட உள்ளது.
இந்த விஜயம், இந்தியா–இலங்கை உறவுகளை மேலும் வலுப்படுத்தும் முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுவதுடன், பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் மக்கள் தொடர்புகளை விரிவுபடுத்தும் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

