அரசியலில் ஒரு தலைமுறையின் பாதையையே மாற்றக்கூடிய சீர்திருத்தங்கள் எப்போதாவதுதான் வரும். மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை (Delimitation) மூலம் இந்தியா அப்படிப்பட்ட ஒரு பெரிய மாற்றத்தின் வாசலில் நின்றது. ஆனால், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி முன்னேறுவதற்குப் பதிலாக, மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அதைத் தடுத்து நிறுத்தியது. தனது அரசியல் லாபத்திற்காக தமிழகப் பெண்களின் மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தை அது பலிகொடுத்தது.
தொகுதி மறுவரையறை பற்றி ஒருவித அச்சத்தை உருவாக்கியே திமுக தனது எதிர்ப்பைக் கட்டமைத்துள்ளது. ஆனால் அந்த அரசியலைத் தாண்டிப் பார்த்தால் உண்மை வேறு. இதில் உள்ள உண்மையான கணக்கு வேறு. மகளிர் இடஒதுக்கீட்டுடன் கூடிய மசோதா நாடாளுமன்ற இடங்களைச் சீராகப் பெருக்குவதை நோக்கமாகக் கொண்டது. அனைத்து மாநிலங்களிலும் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 50% சீராக உயர்த்தப்படும். மாறாக ஏற்கனவே இருக்கும் தொகுதிகளைப் பறிப்பது கிடையாது, கூட்டாட்சித் தத்துவத்தைப் பாதுகாக்கும் வகையில் தொகுதிகளை அதிகரிப்பதே.
இந்த முறையில் தமிழகத்திற்குப் பெரிய லாபம் கிடைத்திருக்கும். அனைத்து மாநிலங்களுக்கும் சமமான சதவிகிதத்தில் இடங்கள் கூடும்போது, எந்த மாநிலமும் தனது செல்வாக்கை இழக்காது. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு, இது இன்னும் கூடுதலான இடங்களையும் கூடுதல் பிரதிநிதித்துவத்தையும் அதிகாரத்தையும் பெற்றுத் தந்திருக்கும்.
ஆனால், இந்தச் சீர்திருத்தம் முடக்கப்பட்டதால் இப்போது நிலைமை மோசமாகியுள்ளது. இனி வரும் தொகுதி மறுவரையறை பழைய முறைப்படி (சட்டப்பிரிவு 81) நடக்கும். அப்போது தொகுதிகள் மக்கள் தொகைக்கு ஏற்பவே ஒதுக்கப்படும். அதாவது மக்கள் தொகை கணக்கெடுப்பிற்குப் பின் தொகுதி மறுவரையறை நடக்கும். இதனால் மக்கள் தொகை அதிகம் உள்ள மாநிலங்களுக்கு அதிக இடங்களும், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தமிழகத்திற்கு மிகக் குறைந்த இடங்களுமே கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
இது மக்கள் தொகை அதிகமாக உள்ள மாநிலங்களுக்கே சாதகமாக அமையும். தமிழகத்தைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டு, திமுக தமிழகத்திற்குப் பெரிய இழப்பையே ஏற்படுத்தியுள்ளது. விவேகமாகச் செயல்படுவதை விட்டுவிட்டு, வெறும் விளம்பர அரசியலைத் தேர்ந்தெடுத்ததால் தமிழகம் இன்று பின் தங்கியுள்ளது. மு.க. ஸ்டாலினின் சுயநலம் இங்கு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இது திமுகவின் வழக்கமான பாணிதான். தொகுதி மறுவரையறை என்றாலும் சரி, வரிப் பகிர்வு என்றாலும் சரி, தமிழகம் ஏதோ வஞ்சிக்கப்படுவதைப் போன்ற ஒரு பிம்பத்தை மு.க. ஸ்டாலின் உருவாக்குகிறார். இது அரசியல் செய்ய வசதியானது; அதேசமயம் மாநில அரசின் தோல்விகளை மறைக்க உதவும் ஒரு கேடயமாகவும் இருக்கிறது. தமிழகத்தைப் பாதிக்கப்பட்ட மாநிலமாகவே மு.க.ஸ்டாலின் காட்டிக்கொள்வதன் மூலம் தனது ஆட்சியின் தோல்விகளை மறைக்க அவர் கையாளும் ஒரு உத்தி தான் இது.
தமிழகத்தின் இன்றைய நிலை கவலை அளிக்கிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையவில்லை. தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது பெரும் கவலையை ஏற்படுத்துகிறது. திமுகவுக்கு நெருக்கமானவர் என்று சொல்லப்படும் ஜாபர் சாதிக் போன்றவர்கள் போதைப்பொருள் கடத்தலில் சிக்கியிருப்பது, அரசியலும் குற்றப் பின்னணியும் கைகோர்த்திருப்பதை உறுதி செய்கிறது. இத்தகைய பிரச்சனைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே, “மத்திய அரசு நமக்கு அநீதி இழைக்கிறது” என்ற பிம்பத்தை திமுக உருவாக்குகிறது.
தொகுதி மறுவரையறை போன்ற சீர்திருத்தங்களை திமுக எதிர்ப்பதற்குக் காரணம் கொள்கை அல்ல, பயம். தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு ஆகிய இரண்டும் வந்தால் அரசியலில் ஒரு பெரிய மாற்றம் ஏற்படும். அதிகமான தொகுதிகள் உருவாகும்போது, வாரிசு அரசியல் பின்னணி இல்லாத புதிய இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். குடும்ப அரசியலில் பிடியில் இருந்த அதிகாரம், தகுதியுள்ள சாதாரண மக்களுக்குச் செல்லும். பெண்களுக்கு இடஒதுக்கீடு கிடைக்கும்போது, குடும்ப அரசியலுக்கு அப்பாற்பட்ட திறமையான பெண்கள் பதவிக்கு வருவார்கள். இது வாரிசு அரசியலையும், ஒரு சில குடும்பங்களின் பிடியில் இருக்கும் அதிகாரத்தையும் தகர்த்துவிடும்.
தங்களது குடும்ப அதிகாரம் போய்விடுமோ என்ற பயத்தில்தான் திமுக இதை எதிர்க்கிறது. இந்தத் தடையால் தகுதி உள்ள இளைஞர்களும், பெண்களும் அரசியலுக்கு வர முடியாமல் போகிறது. வாரிசு அரசியலைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவே, இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் கிடைக்க வேண்டிய வாய்ப்புகளை திமுக தடுத்துள்ளது.
மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை மசோதாவை சீர்குலைத்தது வெறும் கொள்கை முடிவோ, அரசியல் மோதலோ அல்ல. அது ஒரு திட்டமிட்ட துரோகம். இதனை தடுத்ததன் மூலம் ஜனநாயகத்தை விரிவுபடுத்துவதை விட, தங்கள் குடும்ப அதிகாரத்தைக் காப்பாற்றவே திமுக முன்னுரிமை அளித்துள்ளது.
இதன் விளைவாக, பெண்கள் தலைமைப் பொறுப்பு, பதவிக்கு வர இன்னும் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். தேர்தலில் போட்டியிட நினைத்த இளைஞர்களின் வாய்ப்புகள் தடுக்கப்பட்டுள்ளது. திமுகவின் இந்த சுயநல அரசியலால் தமிழகம் தனது வரலாற்று வாய்ப்பை இழந்துள்ளது. மேலும், எதிர்காலத்தில் தமிழகத்தின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவமும் குறையக்கூடும்.
அரசியலில் பொய்களையும் கதைகளையும் கட்டமைக்கலாம். ஆனால் அது தரும் விளைவுகளை மறைக்க முடியாது. தமிழகத்தின் பெண்களும் இளைஞர்களும் திமுக இந்தத் துரோகத்தை உணரும் காலம் வரும். தங்கள் முன்னேற்றத்தைத் தடுத்தது யார் என்பதைத் தமிழகப் பெண்களும் இளைஞர்களும் ஒருநாள் உணர்வார்கள். அந்தக் காலம் வரும்போது தங்கள் கனவுகளைப் பலிகொடுத்தவர்களை அவர்கள் அவ்வளவு எளிதாக மன்னிக்க மாட்டார்கள்.
கட்டுரையாளர்: துஹின் ஏ சின்ஹா

