ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே ஒன்றரை மாதமாக நடந்து வந்த போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதேசமயம் ஈரானிற்குள் இருக்கும் ஹார்முஸ் ஜலசந்திக்குள் மற்ற நாட்டு கப்பல்களை நுழையவிடாமல் அமெரிக்க கப்பல்கள் முற்றுகையிட்டுள்ளன.
இதனால் ஹார்முஸ் வழித்தடம் வழியாக சரக்கு மற்றும் கச்சா எண்ணெய் எடுத்து செல்ல முடியாத நிலையில் கப்பல்கள் இருக்கின்றன. சீன கப்பல்கள் மட்டும் தங்களது நாட்டு போர்க்கப்பல் உதவியோடு வந்து ஈரானில் கச்சா எண்ணெய் எடுத்துச்சென்றுள்ளன.
போர்நிறுத்தம் இருந்தாலும் அமெரிக்கா, மத்திய கிழக்கு பகுதியில் தொடர்ந்து ராணுவத்தை அதிகரித்து வருகிறது. இதற்காக அமெரிக்க போர்க்கப்பல்கள் கடந்த பல மாதங்களாக வளைகுடா கடல்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன.
அதில் யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன், யுஎஸ்எஸ் திரிபோலி போர்க்கப்பல்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால் இக்கப்பல்களில் இருக்கும் ராணுவத்தினர் மற்றும் கடற்படையினருக்கு இப்போது உணவுப்பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் திரிபோலி மற்றும் ஆபிரகாம் லிங்கன் ஆகிய போர்க்கப்பல்களில் பணியாற்றும் வீரர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் அளவு குறித்து அவர்களது குடும்பத்தினர் மிகுந்த கவலை தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க ராணுவ வீரர்கள் தங்களுக்கு கப்பலில் கொடுக்கப்படும் சாப்பாட்டை புகைப்படங்களாக எடுத்து குடும்பத்தினருக்கு அனுப்பி வருகின்றனர். அந்தச் சாப்பாட்டு தட்டில் மிகவும் சொற்ப அளவே உணவு இருக்கிறது.
ஒரு சிறிய கரண்டி இறைச்சி மற்றும் ஒரே ஒரு டார்டிலா (tortilla) மட்டுமே உணவாக வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. காய்கறிகள், பழங்கள் போன்ற புதிய உணவுகள் கிடைப்பதில்லை. வீரர்கள் தங்களுக்குள் உணவைப் பகிர்ந்து உண்ணும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
காபி, பற்பசை, டியூடரண்ட் மற்றும் பெண்களுக்குத் தேவையான சானிட்டரி நாப்கின் போன்ற பொருட்களுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. யுஎஸ்எஸ் திரிபோலி கப்பலில் கடற்படை வீராங்கனையாகப் பணியாற்றும் மகளின் தந்தை டான் எஃப். இது குறித்து கூறுகையில், தனது மகளின் உணவுப் புகைப்படத்தைப் பார்த்த பிறகு அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், “மூன்றில் இரண்டு பங்கு காலியான மதிய உணவுத் தட்டில், ஒரு சிறிய கரண்டி அளவு இறைச்சியும், மடிக்கப்பட்ட ஒரே ஒரு டார்ட்டில்லாவும் இருந்தன. புதிய உணவு கிடைக்கவில்லை என்று எனது மகள் தெரிவித்தார்.

