டில்லிராணி முத்து
ஆயர் தாவார்:
தடைகள் வெற்றியின் புதையல், தடங்கல் வெற்றியின் தடங்கள் எனும் இவ்வரிகளை மெய்ப்பித்து தடைகளையும் தடங்கலையும் சாதனைகளாக மாற்றக்கூடிய வல்லமை பெற்றவர்கள் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் எனக் கூறினார் உலகளவில் புகழ்பெற்ற தேசிய கால்பந்தாட்ட பயிற்றுநரும், மலேசிய கால்பந்தாட்ட முன்னாள் விளையாட்டாளருமான டத்தோ கருத்து மருதையா.


தமிழ்ப்பள்ளி மாணவர்களால் முடியாதது என்று எதுவும் இல்லை. அவர்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும். கல்வியிலும் சரி, விளையாட்டுத் துறையிலும் சரி, நினைத்ததை சாதிக்கும் வல்லமை படைத்தவர்கள் தான் தமிழ்ப்பள்ளி மாணவர்கள். அவ்வகையில் தமிழ்ப்பள்ளி மாணவர்களே வருங்கால சாதனைச் செல்வங்கள் என அவர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.
சென்ற சனிக்கிழமையன்று ஆயர் தாவார் தமிழ்ப்பள்ளி மைதானத்தில் நடைபெற்ற 36ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து சிறப்புரை நிகழ்த்துகையில் அவர் இவ்வாறு கருத்துரைத்தார்.


கல்வி மட்டுமன்றி விளையாட்டுத் துறையிலும் நம் இந்திய மாணவர்கள் அதீத கவனம் செலுத்தி அனைத்துலக நிலையிலும் பட்டையை தீட்டிய வைரங்களாக மிளிர வேண்டும் என தேசிய இலங்கை தேசிய பயிற்றுநருமான டத்தோ கருத்து வலியுறுத்தினார்.


ஆசிய விளையாட்டுப் போட்டி உள்ளிட்ட ஒலிம்பிக் போன்ற உலக அளவிலான போட்டி பந்தயங்களில் பதக்கப் பட்டியலில் நமது இந்திய மாணவர்களும் பங்கேற்று சாதனைகள் பல படைக்க வேண்டும்.
மேலும் தமிழ்ப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கல்விக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை விளையாட்டுத்துறைக்கும் அளித்து நம் மாணவர்களிடம் இருக்கும் திறமைகளை கண்டறிந்து அவர்களை சிறப்பான முறையில் பயிற்றுவித்து உலக அரங்கில் அவர்களை மிளிரச் செய்ய வேண்டும் என்று இவ்விளையாட்டுப் போட்டிக்கு வருகைப் புரிந்த ஆசிரியர்களிடத்திலும் பெற்றோரிடத்திலும் டத்தோ கருத்து கேட்டுக் கொண்டார்.


முன்னதாக இவ்விளையாட்டுப் போட்டியில் தலைமையுரையாற்றிய ஆயர் தாவார் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் சுப்பிரமணியம் ரெங்கசாமி பேசுகையில் மாணவர்கள் வாழ்க்கையில் முன்னேற கல்வி மட்டுமன்றி விளையாட்டுகளும் அவர்களுக்கு மிக மிக முக்கியமானதாகும் என்றார்.


அதோடு மாணவர்கள் இணைப்பாட நடவடிக்கைகளில் அதிகமாக ஈடுபடுவதால் அவர்களுக்கு அதற்கான மதிபெண்கள் கிடைக்கும் என்றும் அது அவர்களின் எதிர்காலத்திற்கு நல்லதொரு வாய்ப்பாக அமையும் என்றும் அவர் நினைவுறுத்தினார்.
அவ்வகையில் இப்பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் கல்விக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை இணைப்பாட நடவடிக்கைகளுக்கும் வழங்கி வருவதோடு அவர்களை அதிகளவில் இணைப்பாட நடவடிக்கைகளிலும் ஈடுபடவும் செய்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.


முன்னதாக இவ்விளையாட்டுப் போட்டியில் வரவேற்புரையாற்றிய இப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் முகுந்தன் வீரப்பன் கூறுகையில் இப்பள்ளியின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் தொடர்ந்து துணை நிற்போம் என உறுதியளித்தார்.


இவ்விளையாட்டுப் போட்டியில் மஞ்சோங் மாவட்டக் கல்வி இலாகா அதிகாரிகள, மாவட்டத் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள், பெற்றோர் என பலரும் திரளாக வந்து கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


இந்த 36 ஆம் விளையாட்டுப் போட்டியில் சிவப்பு இல்லம் முதல் நிலையிலும் மஞ்சள் இல்லம் இரண்டாம் நிலையிலும், பச்சை இல்லம் மூன்றாம் நிலையிலும், நீல இல்லம் நான்காம் நிலையிலும் வெற்றி பெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்ட டத்தோ கருத்தும், தலைமையாசிரியர் சுப்ரமணியமும் பரிசுகளையும் எடுத்து வழங்கினர்.




