கோலா திரெங்கானு, ஏப்ரல் 14:
கோலா திரெங்கானு, கம்போங் பங்கோல் காட்டோங் (Kampung Banggol Katong) பகுதியில், தனது வளர்ப்புப் பெற்றோரின் பராமரிப்பில் இருந்த 3 வயது சிறுவன் ஒருவன், சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த திங்கட்கிழமை, சுயநினைவற்ற நிலையில் இருந்த அந்தச் சிறுவன், புக்கிட் பாயோங் சுகாதார மையத்திற்கு (Bukit Payong Health Clinic) கொண்டு செல்லப்பட்டான். அங்குப் பரிசோதித்த மருத்துவ ஊழியர்கள், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதை உறுதி செய்தனர்.
சிறுவனின் உடலை ஆய்வு செய்ததில், அவன் கடுமையான உடல் காயங்களுடன் இருந்தது தெரியவந்தது. தொடை எலும்பு முறிவு ஏற்பட்டு, அது தசை மற்றும் முக்கிய இரத்த நாளங்களை அழுத்தியதால் ஏற்பட்ட சிக்கல்களே (Acute limb ischemia) மரணத்திற்கு முக்கியக் காரணமாகக் கூறப்பட்டுள்ளது.
சிறுவனின் மார்பு மற்றும் தொடைகளில் பலத்த அடிபட்ட தழும்புகளும், வெட்டுக் காயங்களும் இருந்துள்ளன. மேலும், வலது காலில் திரவம் நிறைந்த கொப்புளங்கள் காணப்பட்டதால், தொற்று நோய் ஏற்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
சிறுவன் கடந்த மூன்று மாதங்களாகத் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர்களான 30 முதல் 50 வயதுடைய இரு ஆண்கள் மற்றும் ஒரு பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான வளர்ப்புத் தந்தை, போதைப்பொருள் பரிசோதனையில் ‘மெத்தாம்பேட்டமைன்’ (Methamphetamine) பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவருக்கு ஏற்கனவே 11 குற்றப் பின்னணிகள் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட மூவரும் வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி வரை 6 நாட்கள் காவலில் (Remand) வைக்கப்பட்டுள்ளனர். 2001-ஆம் ஆண்டு சிறுவர் சட்டத்தின் பிரிவு 31(1)(a)-ன் கீழ் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால், 50,000 ரிங்கிட் வரை அபராதம் அல்லது 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இவை இரண்டும் விதிக்கப்படலாம்.
கோலா திரெங்கானு மாவட்ட காவல் துறைத் தலைவர் அசிஸ்டண்ட் கமிஷனர் அஸ்லி முகமட் நூர் (Azli Mohd Noor) இந்தச் சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.




