ஈப்போ: ஆயர் தவாரில் உள்ள சாங்கட் செர்மின் என்ற இடத்தில் ஒரு பெட்ரோல் நிலையத்தின் முன்பாக, ஐந்து வாகனங்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் ஒரு கார் தீப்பிடித்து எரிந்தது. இந்தச் சம்பவம் மாலை சுமார் 4.55 மணியளவில் நிகழ்ந்ததாக பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி செயல்பாட்டு இயக்குநர் சபரோட்சி நூர் அஹ்மத் தெரிவித்தார்.
சுமார் 11 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஆயர் தவார் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் நேற்று மாலை 5.04 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்து, 5.53 மணிக்குள் தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, மாலை 6 மணிக்கு அதை முழுமையாக அணைத்ததாக அவர் கூறினார்.
இந்த விபத்தில் இரண்டு புரோட்டான் வீரா கார்கள், ஒரு புரோட்டான் இன்ஸ்பிரா, ஒரு புரோட்டான் எக்ஸ்50, ஒரு எஸ்யூவி என மொத்தம் ஐந்து வாகனங்கள் சம்பந்தப்பட்டிருந்தன. எஸ்யூவி வாகனம் தீயினால் சுமார் 60% சேதமடைந்தது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
புரோட்டான் எக்ஸ்50 வாகனத்தில் இருந்த ஒரு பெண்ணுக்கு கைகளிலும் முகத்திலும் லேசான காயங்கள் ஏற்பட்டதாகவும், தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு முன்பே பொதுமக்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும் அவர் கூறினார். மற்ற பயணிகள் காயமின்றி தப்பினர்.




