Last Updated:
2023 ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்பாக ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ், “இந்திய ரசிகர்களை அமைதிப்படுத்துவதே எங்கள் இலக்கு” என்று கூறியிருந்தார்.
உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டி இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நாளை அகமதாபாத் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதையொட்டி நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சான்ட்னர் கொடுத்துள்ள பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
2026 ஐசிசி டி20 உலகக் கோப்பையின் மகுடத்தைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டி, நாளை அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. அரையிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்திய இந்திய அணியும், தென்னாப்பிரிக்காவைத் தோற்கடித்த நியூசிலாந்து அணியும் இந்த மேட்ச்சில் நேருக்கு நேர் மோதுகின்றன.
அகமதாபாத் ஆடுகளம் சிவப்பு மற்றும் கருப்பு மண் கலந்தது என்பதால், ஆட்டத்தின் தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நல்ல ‘பவுன்ஸ்’ மற்றும் வேகம் கிடைக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், இந்த மைதானம் பொதுவாக பேட்ஸ்மேன்களுக்குச் சாதகமாகவே இருந்து வருகிறது. இந்தத் தொடரில் இங்கு நடந்த முந்தைய போட்டியில் 200 ரன்களுக்கு மேல் எடுக்கப்பட்டிருப்பதால், இறுதிப் போட்டியிலும் ஒரு பெரிய ரன் ஸ்கோரை நாம் எதிர்பார்க்கலாம்.
இறுதிப் போட்டி தொடங்குவதற்கு முன்பாக ஒவ்வொரு அணியின் கேப்டன்களும் செய்தியாளர்களை சந்திப்பது வழக்கம். அந்த வகையில் பேட்டி அளித்துள்ள நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சான்ட்னர் கூறியிருப்பதாவது-
இந்த தொடரில் நீண்ட போராட்டத்திற்கு பின்னர் இறுதிப் போட்டிக்கு முன்னேறி வந்துள்ளோம். இந்திய அணி எவ்வளவு வலிமையானது என்பது அனைவருக்கும் தெரியும்.
ஃபைனலில் நாங்கள் வெற்றி பெறுவதை இந்திய அணியின் ரசிகர்கள் விரும்ப மாட்டார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அதைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை. களத்தில் சிறு சிறு விஷயங்களை நாங்கள் சரியாகச் செய்து, ஒரு அணியாகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், அது எங்களை உலகக்கோப்பையை வெல்வதற்கு மிக நெருக்கமாகக் கொண்டு செல்லும் என்று எங்களுக்குத் தெரியும்.
ஒருமுறை கோப்பையை வெல்வதற்கு சில இதயங்களை உடைக்க வேண்டியிருந்தாலும் அதைச் செய்ய நாங்கள் தயாராகவே இருக்கிறோம். என்று தெரிவித்தார்.


