அயோத்தியில் ராமர் கோயிலை வைத்து அரசியல். அடுத்து ஒடிசாவில் பூரி ஜெகன்நாதர் கோயிலை வைத்து அரசியல். இப்படிப் போகும் இடம் எல்லாம் ஒரு கோயிலை வைத்து அரசியல் செய்ய தொடங்கி இருக்கிறது பாஜக. ஒடிசா மாநிலத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகன்நாதர் கோயில் பொக்கிஷ அறையின் சாவியைத் தமிழ்நாட்டுக்குக் கொண்டுபோய்விட்டார்கள் என்று பிரதமர் மோடி பேசி விசயம் இப்போது நாடு முழுவதும் பேசு பொருளாகி இருக்கிறது.
குறிப்பாக அவர் தமிழ்நாட்டை முன்வைத்து தனது தாக்குதலை நடத்தியதால், அந்தச் செய்தி தமிழர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஒடிசா மாநிலத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த விகே பாண்டியன் மீது அரசியல் ரீதியாகத் தாக்குதலை நடத்திய மோடி, அதன் தொடர்ச்சியாகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் ஒடிசாவை ஆள்வதா என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
அதே கேள்வியை அமித்ஷாவும் கேட்டிருந்தார். இதன் இன்னொரு பகுதியாகத்தான் ஜெகன்நாதர் கோயில் பொக்கிஷ அறையைச் சாவி இப்போது சர்ச்சையாகி உள்ளது. உண்மை இந்தப் பொக்கிஷ அறையில் என்ன உள்ளது? அதன் சாவி யாரிடம் உள்ளது? உண்மையில் அந்தக் கோயிலில் பொக்கிஷ அறை என்று ஒன்று உள்ளதா? என்ற பல கேள்விகள் இப்போது எழுந்துள்ளன.
இது குறித்துக் கடந்த கால வரலாற்றை மிகத் தெளிவாக அளித்துள்ளார் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம். பூரி ஜெகன்நாதர் பொக்கிஷ அறை பற்றி அவர் பேசும்போது, “பூரி கெகன்நாதர் கோயில் பொக்கிஷ அறை சாவியைப் பற்றி விகே பாண்டியனே விளக்கம் கொடுத்துள்ளார். ‘பிரதமர் மோடியே அந்தச் சாவியைக் கண்டுபிடித்துத் தரட்டும்’ என்று அவர் சொல்லி இருக்கிறார்.
மேலும், ‘அந்தக் கோயில் அறை கடந்த 40 ஆண்டுகளாகப் பூட்டிக் கிடக்கின்றது. கடந்த 2018இல் ஒடிசா உயர்நீதிமன்றம் ஒரு உத்தரவைப் பிறப்பித்தது. அதற்காகக் கோயில் அறையைத் திறக்க முயன்ற போது சாவி கிடைக்கவில்லை. அதன் நிஜமான சாவிதான் இல்லை. ஆனால், அதன் நகல் சாவி இப்போது இருக்கிறது. அந்தச் சாவியை வைத்து அறையைத் திறக்கலாம்.
ஆனால், ஒரு குறிப்பிட்ட நாளிதான் அந்தச் சாவியை வைத்துத் திறக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அப்போதுதான் திறக்க முடியும். நிலைமை இப்படி உள்ள போது, பிரதமரே அவதூறாக பேசுவது நியாயமில்லை’ என்று பல விளக்கங்களை அளித்துள்ளார் பாண்டியன்.
இப்போது சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிற ரகசிய பொக்கிஷ அறைக்குப் பெயர், ரத்ன பந்தர். அதில் மொத்தம் 7 அறைகள் உள்ளன. அதில் முதல் 2 அறைகள்தான் திறந்துள்ளன. இந்த முதல் 2 அறைகள் எப்போது திறக்கப்பட்டது என்றால், 1964 மற்றும் 1984 ஆகிய ஆண்டுகளில் 2 முறை திறக்கப்பட்டன. இதற்கு என்று ஒரு குழு உள்ளது. அவர்கள்தான் இந்த அறையைத் திறக்க முடியும்.
அந்தக் குழுவில் உயர்நீதிமன்ற பிரதிநிதி இருக்கிறார். பூரி ராஜா குடும்பத்தின் பிரதிநிதியும் இருக்கிறார். அரசு அதிகாரிகள் உள்ளனர். மொத்தம் 16 பேர்களைக் கொண்ட குழு இது. ஒடிசா மக்களின் நம்பிக்கை என்னவென்றால், இந்த அறைகளைத் திறக்கவே கூடாது என்பதுதான். காரணம், இந்தப் பொக்கிஷ அறைகளைப் பாம்புகள் காவல் காத்து வருகின்றன என்பது ஐதீகம்.
இதேபோலவே ஜெகன்நாதர் கோயிலுக்கு இன்னொரு பொக்கிஷ அறையும் உள்ளது. அதற்குப் பகாரா பந்தர் என்று பெயர். இதற்கு அடுத்து பிகாரா பந்தர் என்று ஒரு அறை உள்ளது. இதை எல்லாம் தாண்டிப் போனால்தான் ரத்ன பந்தர் பொக்கிஷ அறைக்குள் போக முடியும்.
முதலில் உள்ள 2 கருவூலங்களில் நிறைய ஆபரணங்கள், முத்துகள், வைரங்கள், வைடூரியங்கள், தங்கத் தகடுகள் எல்லாம் உள்ளன. அவை பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இதற்கு எல்லாம் தனிச் சட்டம் உள்ளது. ஒடிசா மாநிலம் உருவாவதற்கு முன்பே 1952இல் போடப்பட்ட சட்டம்.
இச்சட்டத்தின்படி ஒரு பதிவேடு உள்ளது. அதை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம். இதை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம். அதில் பொக்கிஷ அறையில் உள்ள தங்கள் பற்றிய விவரங்கள் உள்ளன. அதில் அனைத்தும் பட்டவர்த்தனமாகப் பதிவாகி உள்ளது. இதில் மூடி மறைப்பதற்கு ஒன்றுமே இல்லை.
அப்படி இருந்தும் பிரதமர் மோடி ஏன் அப்படிப் பேசினார் என்பது புரியவில்லை. இந்தப் பொக்கிஷ அறையின் சாவியை 3 பேர்கள்தான் கையாள முடியும். வேறு ஒருவரும் தொட முடியாது. பூரி கெஜபதி என்று சொல்லப்படும் ராஜாவுக்குத்தான் முதல் உரிமை. அடுத்து ஜெகன்நாதர் கோயில் நிர்வாகி பயன்படுத்தலாம். அடுத்து பந்தர் எனச் சொல்லப்படுபவர்.
அறையின் உண்மையான சாவி தொலைந்து போனது உண்மை. அது இன்று நடந்தது அல்ல. பலபல வருடங்களுக்கு முன்பே தொலைந்துபோனது. அதன் நகல் சாவி மூன்று பேரியம் இன்றும் பாதுகாப்பாக உள்ளது. அதுவும் உண்மை. பிறகு ஏன் இப்படிப் பேசுகிறார் மோடி எனத் தெரியவில்லை என்கிறார்


