Last Updated:
Income Tax | வரி விலக்குகளை நவீனப்படுத்துவதன் மூலமும், பணவீக்கத்திற்கு ஏற்ப Allowances-களை சரிசெய்வதன் மூலமும், பழைய வரி முறை பலருக்கு மீண்டும் நடைமுறைப்படுத்த பயனுள்ளதாக மாறியுள்ளது.
வருமான வரி விதிகளுக்கு மாற்றாக கொண்டு வரப்பட்டுள்ள புதிய வரைவு விதிகளில் பழைய வரி முறைக்கு அதிக சலுகைகள் வழங்கும் வகையில் பல்வேறு அம்சங்கள் உள்ளன. இதனால், ஏராளமானோர் பழைய வரி முறைக்கு மாற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
வருமான வரிச் சட்டத்தை எளிமையாக்குவதற்காக புதிய வரைவு விதிகளை மத்திய நேரடி வரிகள் வாரியம் அண்மையில் வெளியிட்டது. இது வரி செலுத்தும் முறையை எளிதாக்குவதையும், வரி தொடர்பான குழப்பங்களைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. புதிய வரி முறையை மத்திய அரசு Default முறையாக அறிவித்திருந்தாலும், புதிய வரைவு விதிகள் பழைய முறையில் உள்ள வரிச் சலுகைகளை எவ்வாறு கோருவது என்பது குறித்து அதிகத் தெளிவை அளித்துள்ளன. இதனால் மக்கள் மீண்டும் பழைய முறையை ஒப்பிடத் தொடங்கியுள்ளனர்.
புதிய வரைவு விதிகளின் படி, வாடகை வீட்டில் வசிப்பவர்கள் பழைய முறையில் பெரும் வரி விலக்குப் பெறலாம். அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதத் தொகைக்கு வீட்டு வாடகை வரிவிலக்கு பெறும் சலுகை, பெங்களூரு, ஹைதராபாத், புனே, அகமதாபாத் ஆகிய நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது. முன்னர், இது மும்பை, கொல்கத்தா, டெல்லி மற்றும் சென்னையில் மட்டுமே இருந்தது. மற்ற நகரங்களில் 40 சதவிகித வரிச் சலுகையே தொடரும்.
புதிய விதிகளின் படி ஏற்படுத்தப்பட்டுள்ள மிக முக்கிய மாற்றம், கல்விக்கான சலுகைகள்…
- கல்விக்கான வரிச் சலுகை நூறு ரூபாயிலிருந்து 3 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தச் சலுகை இரண்டு குழந்தைகளுக்கு அளிக்கப்படும். மாணவர் விடுதி கட்டண வரிச் சலுகை 300 ரூபாயிலிருந்து 9 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் வருமான வரி செலுத்துபவர்கள், பழைய முறையை நோக்கி நகர்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- அதேபோல், மெட்ரோ நகரங்களில், மாற்றுத்திறனாளிகளுக்கு போக்குவரத்து சலுகை 15,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, அரசு வரி விகிதங்களைக் குறைத்தும், வரி விலக்குகளைக் குறைத்தும் வரி செலுத்துவோரை புதிய வரி முறைக்கு மாறும்படி ஊக்குவித்து வருகிறது. ஆனால், தற்போதைய புதிய வரைவு விதிகள் இந்தச் சமன்பாட்டை நுட்பமாக மாற்றியமைக்கின்றன.
- எல்.ஐ.சி, பி.பி.எஃப் மற்றும் மருத்துவக் காப்பீடு போன்ற முதலீடுகளுக்கு புதிய வரி முறையில் எந்தப் பயனும் இல்லை. ஆனால், புதிய வரைவு விதிகள் பழைய முறையிலுள்ள இந்தச் சலுகைகளை எளிதாகப் பெற வழிவகை செய்வதால், முதலீட்டாளர்கள் பழைய முறையையே அதிகம் விரும்புகின்றனர்.
வரி விலக்குகளை நவீனப்படுத்துவதன் மூலமும், பணவீக்கத்திற்கு ஏற்ப Allowances-களை சரிசெய்வதன் மூலமும், பழைய வரி முறை பலருக்கு மீண்டும் நடைமுறைப்படுத்த பயனுள்ளதாக மாறியுள்ளது. குறிப்பாக, வாடகை செலுத்துபவர்கள், குழந்தைகளின் கல்விக்குச் செலவு செய்பவர்கள், முறையாக நிதித் திட்டமிடல் வைத்திருப்பவர்கள், சம்பளம் பெறும் ஊழியர்களுக்குப் பழைய வரி முறையே அதிக லாபகரமானதாக இருக்கும்.


