அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை, அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி அடக்கி வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
பிஹார் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்த நிலையில், காங்கிரசை கலைத்து விடுங்கள் என்று ராஜேந்திர பாலாஜி கூறியிருந்தார். இதற்கு பதிலளித்து செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, குறைந்தபட்ச நாகரிகம், அரசியல் நாகரிகம் கூட தெரியாமல், காங்கிரஸ் குறித்தும், ராகுல்காந்தி குறித்தும் பேசி இருக்கிறார்.
பிஹாரில் காங்கிரஸ் முதன்மைக் கட்சி கிடையாது. தேஜஸ்வியின் ஆர்ஜேடி கட்சி தான் முதன்மை கட்சி. தமிழகத்தில் 1991-96ல் ஆட்சியில் இருந்த முதன்மை கட்சியின் நிலை, 1996 தேர்தலில் என்ன ஆனது, அவர்கள் எத்தனை தொகுதிகளில் வென்றார்கள். கட்சி தலைமை பொறுப்பு வகித்த ஜெயலலிதாவே, தோற்றார்.

