Cricket
oi-Yogeshwaran Moorthi
சென்னை: கிழக்கு மண்டல அணிக்கு எதிராக துலீப் டிராபி இறுதிப் போட்டியில் தென் மண்டல அணியின் கேப்டன் திலக் வர்மா 99 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறி இருக்கிறார். திலக் வர்மாவின் அபார ஆட்டத்தில் தென் மண்டல அணி மொத்தமாக 336 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. இருப்பினும் கிழக்கு மண்டல அணி ஃபாலோ ஆன் கொடுக்காமல், 2வது இன்னிங்ஸை தொடங்கி இருக்கிறது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வரும் துலீப் டிராபி இறுதிப் போட்டியில் தென் மண்டல அணியை எதிர்த்து கிழக்கு மண்டல அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய கிழக்கு மண்டல அணி முதல் இன்னிங்ஸில் 708 ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடிய கேப்டன் இஷான் 7 சிக்ஸ், 30 பவுண்டரி உட்பட 270 ரன்களை குவித்தார்.

இதன்பின் களமிறங்கிய தென் மண்டல அணி முதல் இன்னிங்ஸில் தடுமாறியது. 174 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தென் மண்டல அணி தடுமாறிய போது, கேப்டன் திலக் வர்மா – மிலிந்த் கூட்டணி நிதானமாக ஆடி கரை ஏற்றியது. 4வது நாளாக இன்றும் தென் மண்டல அணி பேட்டிங்கை தொடர்ந்த போது, திலக் வர்மா மிகப்பெரிய இன்னிங்ஸை ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் சிறப்பாக ஆடிய அவர், சதத்தை நெருங்கி 99 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்து ஏமாற்றினார். இதனால் அவர் 211 பந்துகளில் 99 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். இவர் பின் வந்த வீரர்கள் யாரும் பெரிதாக சோபிக்கவில்லை. இதனால் தென் மண்டல அணி 336 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதில் முகேஷ் குமார் 3 விக்கெட்டுகளையும், ஷமி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
தொடர்ந்து 372 ரன்கள் முன்னிலை பெற்ற போது, கிழக்கு மண்டல அணி ஃபாலோ ஆனை கொடுக்கவில்லை. அதற்கு தென் மண்டல அணி 108 ஓவர்கள் பேட்டிங் ஆடியதே காரணம். கிழக்கு மண்டல அணியின் பவுலர்களும் சோர்வடைந்து இருப்பார்கள். இதனை கருத்தில் கொண்டு கிழக்கு மண்டல அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. இதனால் பவுலர்களுக்கு நல்ல ஓய்வும் கிடைக்கும்.
அண்மையில் இந்திய அணி இலங்கை அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இப்படியான தவறை தான் செய்தது. பவுலர்களுக்கு ஓய்வு கொடுக்காமல் ஃபாலோ ஆன் கொடுத்து, இலங்கை பேட்ஸ்மேன்களை விளையாட வைத்தது. சோர்வடைந்த இந்திய பவுலர்களை மேலும் சோர்வடைய செய்து இலங்கை அணி ஆட்டத்தை டிரா செய்தது. இதனை உணர்ந்து இஷான் கிஷன் சரியான முடிவை எடுத்துள்ளார்.

