Last Updated:
இதுவரை 33 சர்வதேச டி20 போட்டிகளை விளையாடியுள்ள ரிங்கு சிங், 546 ரன்களை விளாசியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரரான ரிங்கு சிங்கை அடிப்படை கல்வி அலுவலராக நியமிக்க உத்தர பிரதேச அரசு முடிவெடுத்துள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டு தொடர்ச்சியான 5 சிக்சர்கள் மூலம் கொல்கத்தா அணியை வெற்றிபெறச் செய்த ரிங்கு சிங், அந்த போட்டிக்கு பிறகு தான் தேசத்தின் கவனத்தை ஈர்த்தார். இதையடுத்து இந்திய அணியில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
இதுவரை 33 சர்வதேச டி20 போட்டிகளை விளையாடியுள்ள இவர், 546 ரன்களை விளாசியுள்ளார். சர்வதேச ஒருநாள் போட்டியில் 55 ரன்களை எடுத்துள்ளார். இதற்கிடையில், சமாஜ்வாதி எம்.பியான ப்ரியா சரோஜுடன் இவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் தான் ரிங்கு சிங்கிற்கு உத்தர பிரதேச அரசு அடிப்படை கல்வி அலுவலர் பதவியை வழங்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் உள்ள பள்ளிகளை அவர் சென்று அங்கு தரமான கல்வி வழங்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய முடியும். மேலும் பள்ளிகள் மீதுள்ள புகார்களையும் அந்த கல்வி அலுவலரால் ஆய்வு செய்ய முடியும்.
வறுமை காரணமாக 9 ஆம் வகுப்பிற்கு மேல் படிக்காத ரிங்கு சிங்கிற்கு இந்த பதவி வழங்கப்பட்டுள்ளது அவரின் சாதனைக்கான அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது. இருந்தாலும், 9ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள ரிங்கு சிங், தரமான கல்வி வழங்கப்படுவதை எப்படி ஆய்வு செய்ய முடியும் என்பதையும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
June 27, 2025 12:49 PM IST


