Last Updated:
குழந்தை திருமணத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ள 8ஆம் வகுப்பு மாணவிக்கும், கண்டிவாடா பகுதியை சேர்ந்த ஸ்ரீனிவாஸ் கவுட் என்ற 40 வயது நபருக்கும் கடந்த மே 28 அன்று திருமணம் செய்து வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமிக்கும், 40 வயது நபருக்கும் நடைபெற்ற திருமணத்தின்மீது அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கை எடுத்து சிறுமியை மீட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பிட்ட மாணவி படிக்கும் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர், சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற இந்த திருமணம் குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து எச்சரித்ததை அடுத்து அந்த 8ஆம் வகுப்பு மாணவி குழந்தை திருமணத்தில் இருந்து மீட்கப்பட்டது நிம்மதி பெருமூச்சை அளித்துள்ளது.
குழந்தை திருமணத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ள 8ஆம் வகுப்பு மாணவிக்கும், கண்டிவாடா பகுதியை சேர்ந்த ஸ்ரீனிவாஸ் கவுட் என்ற 40 வயது நபருக்கும் கடந்த மே 28 அன்று திருமணம் செய்து வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த மாணவி தனது தாய் மற்றும் சகோதரனுடன் வசித்து வந்ததாக தெரிகிறது. மாணவியின் தாய் தாங்கள் வாடகைக்கு வசித்த வீட்டு உரிமையாளரிடம், தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்க விரும்புவதாக கல்யாண பேச்சை எடுத்துள்ளார். இதனை தொடர்ந்து ஒரு இடைத்தரகர் மூலம் 40 வயது நபர் வரனை பார்த்து அந்த 13 வயது சிறுமிக்கும், 40 வயது நபருக்கும் கடந்த மே மாதம் ‘திருமணம்’ நடந்துள்ளது” என்று போலீசார் தகவல் தெரிவித்து உள்ளனர்.
இந்த குழந்தை திருமணம் குறித்த தகவலை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் சிறுமியின் தாயார், சிறுமியை திருமணம் செய்த ஸ்ரீனிவாஸ் கவுட், இடைத்தரகர், சட்டவிரோத திருமணத்தை நடத்திவைத்த நபர் மற்றும் திருமண ஏற்பாடுகளை செய்ததாக கூறப்படும் ஒரு பெண் ஆகியோர் மீது குழந்தை திருமணத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
இந்த சட்டவிரோத திருமணம் குறித்து தகவல் தெரிவித்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி பிரவீன் குமார், “பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (POCSO) சட்டத்தின் கீழ், மைனருடன் பாலியல் உறவு கொள்வது தண்டனைக்குரியது. அவர்கள் (மாணவி மற்றும் ஸ்ரீனிவாஸ் கவுட்) சுமார் இரண்டு மாதங்கள் இணைந்து வாழ்ந்தனர். இந்த காலக்கட்டத்தில் சிறுமி பாலியல் உறவுக்கு வற்புறுத்தப்பட்டது விசாரணையில் தெரியவந்தால், சிறுமியை திருமணம் செய்த ஸ்ரீனிவாஸ் கவுட் மீது போக்சோவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும்” என்றும் குறிப்பிட்டார்.
தற்போது குழந்தை திருமணத்தில் இருந்து மீட்கப்பட்ட அந்த சிறுமி துன்பத்தில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான அரசாங்க ஆதரவுடன் கூடிய சகி மையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு சிறுமிக்கு தொடர்ந்து ஆலோசனை மற்றும் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. பள்ளி மாணவியின் ஆசிரியர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு சேவைகள் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் அளித்ததை அடுத்து 2 மாதங்களாக சட்டவிரோத திருமணத்தில் சிக்கித் தவித்த சிறுமி மீட்கப்பட்டுள்ளார்.
August 05, 2025 9:43 AM IST


