Cricket
oi-Yogeshwaran Moorthi
கார்டிஃப்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 50 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தியுள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி அடிக்கும் 78வது அரைசதம் இதுவாகும். அதேபோல் இங்கிலாந்து அணிக்கு எதிராக 14வது முறையாக அரைசதம் விளாசி விவ் ரிச்சர்ட்ஸ் சாதனையை விராட் கோலி சமன் செய்துள்ளார்.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி கார்டிஃப் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி ப்ரூக் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா – சுப்மன் கில் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. சிறப்பான ஃபார்மில் இருந்த சுப்மன் கில் பவுண்டரிகளை விளாசி ரன்களை சேர்த்தார்.

ஆனால் ரோகித் சர்மாவுக்கு இன்னும் டைமிங்கில் பிரச்சனை இருந்தது. ஆனால் திடீரென அட்கின்சன் பந்தில் கவர்ஸில் பவுண்டரி அடிக்க முயன்று கில் 31 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் வந்த விராட் கோலி பவுண்டரிகளாக விளாசி தள்ளினார். ரோகித் சர்மாவின் தடுமாற்றத்தை உணர்ந்து கொண்டு, அவருக்கும் சேர்த்தே ரன்களை சேர்க்க தொடங்கினார்.
இதனால் இந்திய அணியின் ரன் ரேட் எந்தவித சிக்கலும் இல்லாமல் இருந்தது. ஒரு கட்டத்தில் ரோகித் சர்மா 47 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, விராட் கோலி பொறுப்புடன் விளையாட தொடங்கினார். ஸ்பின்னர்களான அடில் ரஷீத் மற்றும் வில் ஜாக்ஸ் பந்துகளில் விராட் கோலி அட்டாக் செய்து பவுண்டரிகளை அடித்தார்.
சிறப்பாக ஆடிய அவர் 50 பந்துகளில் 50 ரன்களை எட்டினார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி அடிக்கும் 78வது அரைசதம் இதுவாகும். அதேபோல் இங்கிலாந்து அணிக்கு எதிராக விராட் கோலி அடிக்கும் 14வது அரைசதம் இது. இதன் மூலமாக இங்கிலாந்து அணிக்கு எதிராக அதிக அரைசதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் விவ் ரிச்சர்ட்ஸ் சாதனையை விராட் கோலி சமன் செய்துள்ளார்.
இன்னும் ஒரு அரைசதம் அடித்தால், சங்கக்காராவுடன் முதலிடத்தை பகிர்ந்து கொள்ள முடியும். சிறப்பாக ஆடிய விராட் கோலி 65 ரன்கள் எடுத்திருந்த போது, ஆர்ச்சரின் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி ஃபார்மை தொடர்ந்து வருவது ரசிகர்களிடையே நம்பிக்கையை அதிகரித்துள்ளது.

