கோலாலம்பூர்:
தேசிய அளவிலான திறமைகளை மேம்படுத்தும் நோக்கில், சிறந்த முறையில் எஸ்பிஎம் (SPM) தேர்ச்சி பெற்ற 640 மாணவர்களுக்குப் பொதுச் சேவைத் துறை (PSD/JPA) கல்வி உதவித்தொகை வழங்குகிறது.
மடானி அரசாங்கத்தின் இலக்குகளுக்கு ஏற்ப, உள்நாட்டு மற்றும் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட வெளிநாட்டு முன்னணி பல்கலைக்கழகங்களில் பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் சமூக அறிவியல் போன்ற முக்கியத் துறைகளில் பயில இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது.
இதன் கீழ் தேசிய அளவிலான திட்டத்திற்கு 30 இடங்களும், எஸ்பிஎம் சாதனையாளர்களுக்கான சிறப்புத் திட்டத்திற்கு 200 இடங்களும், ஜேபிகேஜேபி (JKPJ) திட்டத்திற்கு 140 இடங்களும், ஜேபிஏ-மாரா திட்டத்திற்கு 270 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட கல்வித் தகுதி அடிப்படையிலான மாற்றத்தக்கக் கடன் (Convertible Loan) முறையில் இந்த நிதியுதவி வழங்கப்படும் வேளையில், விண்ணப்பதாரர்கள் தங்களின் முடிவுகளை இன்று காலை 10 மணி முதல் ஜூன் 22 மாலை 5 மணி வரை இணையப் பக்கத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம்.




