Last Updated:
Dhoni | நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார். மைதானத்திற்கு அழைக்கப்பட்ட சிவகார்த்திகேயன் தோனி உள்ளிட்ட சென்னை அணி வீரர்களிடம் கைகுலுக்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.
ஓய்வு குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் கேட்ட கேள்விக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் தோனி அளித்த பதில் கவனம் பெற்று வருகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரீயூனியன் நிகழ்ச்சி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது ஏராளமான போட்டிகளின் போது சென்னை அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த சுரேஷ் ரெய்னா, மேத்யூ ஹேடன், முரளி விஜய், பிராவோ, அம்பதி ராயுடு, லட்சுமிபதி பாலாஜி, மைக்கேல் ஹசி உள்ளிட்ட வீரர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அடுத்த வாரம் தொடங்க உள்ள நிலையில் நடைபெற்ற இந்த ரீயூனியன் நிகழ்ச்சி சென்னை அணி வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார். மைதானத்திற்கு அழைக்கப்பட்ட சிவகார்த்திகேயன் தோனி உள்ளிட்ட சென்னை அணி வீரர்களிடம் கைகுலுக்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.
பின்னர் அவர் பேசியதாவது: “தோனி சார், உங்களை டிவியில் பார்த்துள்ளேன். இந்த மைதானத்தின் வெவ்வேறு பகுதியில் அமர்ந்தும் உங்களை பார்த்திருக்கிறேன். முதன்முறையாக உங்களை நான் நேரில் சந்திக்கிறேன். இது எனக்கு கொஞ்சம் நடுக்கத்தை கொடுக்கிறது. நாங்கள் உங்களைப் போன்று கூலான நபர் கிடையாது. கோடிக்கணக்கானோருக்கு உங்களது கிரிக்கெட்டை போன்று உங்களது தலைமைப் பண்பு அதிகம் பிடிக்கும். இன்றைய தினம் நான் குழந்தை போல் உணர்கிறேன்.
வெற்றி மற்றும் தோல்வியின் போது சென்னை அணிக்கு உறுதுணையாக ரசிகர்கள் உள்ளனர். எனவே இதனை குடும்பம் என சொல்லலாம். ஐபிஎல் என்டர்டெயின்மென்ட்டாக இருந்தாலும் சிஎஸ்கே என்பது எமோஷன். அந்த எமோஷனுக்கு உதாரணம் தான், தோனி பேட்டிங் செய்ய வரும்போது வரும் சத்தம். எனது வீடு ஈசிஆரில் உள்ளது. சேப்பாக்கத்தில் தோனி களம் இறங்கும்போது ரசிகர்கள் எழுப்பும் சத்தம் எனது வீடு வரை கேட்கும்.
கேப்டன் ருதுராஜுக்கு தோனி மற்றும் லட்சக்கணக்கான சென்னை அணியின் ரசிகர்கள் ஆதரவாக உள்ளனர். இந்த முறை சென்னை அணி கோப்பையை வெல்லும். அத்துடன் அணிக்கு பலம் சேர்க்க சஞ்சு சேட்டாவும் இணைந்துள்ளார்.” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து சிவகார்த்திகேயன் தோனியிடம், கடந்த சீசனில் நீங்கள் ஓய்வு பெறுவீர்களா என்று கேட்டபோது நிச்சயமாக இல்லை என்று பதில் அளித்தீர்கள். இந்த முறையும் அதே பதிலை அளிப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறோம் என்று கேட்டார். மேலும் 60 வயது வரை நீங்கள் விளையாட வேண்டும் என்று தோனிடம் தெரிவித்தார் சிவகார்த்திகேயன். இதற்கு பதில் அளித்த தோனி, “அந்த வயது வரை விளையாடுவது கடினமான காரியம். என்னுடைய ஃபிட்னஸ் நாளுக்கு நாள் குறைந்துகொண்டே இருக்கிறது. எனினும் நான் முயற்சி செய்வேன்.” என்று தெரிவித்தார்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu


