கோலாலம்பூர் | மார்ச் 03, 2026:
மலேசியாவில் 6 வயதிலேயே குழந்தைகளை முதலாம் வகுப்பில் (Year One) சேர்ப்பதற்கான புதிய திட்டத்திற்குப் பெற்றோர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதாகக் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2027-ஆம் ஆண்டு கல்விச் சேர்க்கைக்காக நேற்று (மார்ச் 2) வரை மொத்தம் 351,789 விண்ணப்பங்கள் பதிவாகியுள்ளன. இதில் 5 வயது பூர்த்தியான (5+) சுமார் 51,457 குழந்தைகளின் விண்ணப்பங்களும் அடங்கும் என்று, கல்வித்துறை துணை அமைச்சர் வாங் கா வோ (Wong Kah Woh) மேலவையில் தெரிவித்தார்.
இது குழந்தைகளின் கல்வித் தயார்நிலை மற்றும் அரசின் புதிய கல்வி முறையின் மீது பெற்றோர்கள் வைத்துள்ள நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது.
அதிகரித்து வரும் தேவையைக் கருத்தில் கொண்டு, பாலர் பள்ளி (Preschool) வசதிகளை மேம்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
2026-ஆம் ஆண்டில் மட்டும் கூடுதலாக 350 புதிய பாலர் பள்ளி வகுப்புகளைத் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது (2025-இல் 150 வகுப்புகள் திட்டமிடப்பட்டிருந்தன) என்று அவர் கூறினார்.
தொடக்கப்பள்ளிகள் மட்டுமின்றி, தொழிற்கல்வி கல்லூரிகள் மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும் (IPG) பாலர் பள்ளி வசதிகள் விரிவுபடுத்தப்படும். தற்போது 10,514 பாலர் பள்ளி வகுப்புகள் செயல்பாட்டில் உள்ளன என்று அவர் சொன்னார்.




