கே.பி. ஹார்மிஸ் என அன்போடு அழைக்கப்படும் குலங்கரா பவுலோ ஹார்மிஸ், இந்தியாவில் குறிப்பாக தென் இந்திய வங்கித் துறையின் முன்னோடிகளில் ஒருவர் ஆவார். 1917-ம் ஆண்டு கேரள மாநிலத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்த ஹார்மிஸ், ஆரம்ப காலத்தில் பெரும்பாவூரில் உள்ள முனிசீஃப் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பயிற்சி செய்துவந்தார்.
அந்த சமயத்தில்தான் திருவாங்கூர் ஃபெடரல் வங்கி திவாலாகும் சூழ்நிலையில் இருந்தது. 1944-ம் ஆண்டு தன்னுடைய வழக்கறிஞர் பணியை ராஜினாமா செய்த ஹார்மிஸ், தத்தளித்துக் கொண்டிருந்த ஃபெடரல் வங்கியின் குறிப்பிட்ட சதவிகித பங்குகளை சொந்தமாக வாங்கினார். அன்று முதல் அவரது வாழ்க்கையில் புதிய அத்தியாயம் தொடங்கியது.
வங்கியின் முழுக் கட்டுப்பாட்டையும் தனக்கு கீழ் கொண்டுவரும் வகையில் வங்கியின் பங்குகளை வாங்கி குவித்தார் ஹார்மிஸ். இப்போது வங்கியின் பங்கு மூலதனம் ரூ.5000லிருந்து ரூ.71,000 வரை அதிகரித்தது. இதனையடுத்து வங்கியின் தலைமையகத்தை நீடும்புரத்திலிருந்து அலுவாவிற்கு மாற்றினார். இது அவர் எடுத்த முக்கியமான உத்திகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. அதோடு நிற்காமல் வங்கியின் பெயரிலிருந்த திருவாங்கூரை நீக்கிவிட்டு, வெறும் ஃபெடரல் வங்கி என பெயர் மாற்றினார்.
இந்த சமயத்தில்தான் கேரளாவில் ஒரு வகையான சிட் ஃபண்டு மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தது. ஏலச்சீட்டு முறையில் பின்பற்றப்படும் இந்த திட்டத்தில் பங்கேற்கும் ஒருவருக்கு 50 சதவிகிதம் தள்ளுபடி தரப்படும். 1949-ம் ஆண்டு வங்கி உரிமம் பெற்ற ஃபெடரல் வங்கி, உடனடியாக இந்த சிட் ஃபண்ட் திட்டத்தை விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தினார் ஹார்மிஸ். இந்த புதுமையான திட்டம் மூலம் அவர்களுக்கு எளிதில் வங்கி மூலம் பண உதவி கிடைக்கச் செய்தார்.
கொஞ்சம் கொஞ்சமாக கேரளாவில் ஃபெடரல் வங்கியின் கிளைகள் அதிகரிக்க ஆரம்பித்தன. 1968-ம் ஆண்டு சாலக்குடி வங்கி, கொச்சின் யூனியன் வங்கி, மார்த்தாண்டம் வங்கி, புனித ஜார்ஜ் யூனியன் வங்கி மற்றும் அலப்பி வங்கி போன்ற ஐந்து திவாலான வங்கிகளை கைப்பற்றினார் ஹார்மிஸ்.
இதையும் படிக்க:
தொடக்கத்தில் ரூ.50,000 முதலீடு.. 3 மடங்கு தந்த லாபம்.. இன்று சொத்து மதிப்பு ரூ.18,330 கோடி; யார் அவர் தெரியுமா?
விவசாயிகள் மற்றும் சிறு வாடிக்கையாளர்களுக்காக தொடங்கப்பட்ட ஃபெடரல் வங்கி, 1970-ம் ஆண்டு வர்த்தக வங்கியாக மாற்றமடைந்து தங்களது முதல் அலுவலகத்தை மும்பையில் திறந்தனர். தொடர்ந்து வளர்ச்சியடைந்து வந்த ஃபெடரல் வங்கி, 1977-ம் ஆண்டிற்குள் இந்தியா முழுவதும் 277 கிளைகளோடு செயல்பட்டு வந்தது. இன்று நாடு முழுவதும் 1,600-க்கும் மேற்பட்ட கிளைகளோடு ரூ.40,000 கோடி சந்தை மதிப்புடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது ஃபெடரல் வங்கி. இவ்வளவு பெருமைக்கு காரணமான கேபி ஹார்மிஸ், 1988-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி தனது 70-வது வயதில் இயற்கை எய்தினார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
