நெகிரி செம்பிலான், செரம்பானில் 6ஆம் வகுப்பு மாணவர்களைக் குண்டர் குழுக்களில் சேர்ப்பதற்காக ஆள் சேர்த்ததாகக் கூறப்படும் 20 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 9.10 மணியளவில் கார்டன் ஹோம்ஸில் உள்ள ஒரு உணவகத்தின் முன்பாக சந்தேக நபர் தடுத்து வைக்கப்பட்டதாக செரம்பான் காவல் துறைத் தலைவர் அஸஹர் அப்துல் ரஹீம் கூறியதாக வட்டாரம் செய்தி வெளியிட்டுள்ளது.
மாநில மற்றும் மாவட்ட அளவிலான ஒழுக்கக்கேடு, சூதாட்டம் மற்றும் இரகசிய சங்கங்கள் (D7) தடுப்புப் பிரிவுகளால் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
குற்றம் தொடர்பான நான்கு வழக்குகளில் குற்றப் பதிவுகளைக் கொண்ட அந்த சந்தேக நபர், 1966ஆம் ஆண்டு சங்கங்கள் சட்டத்தின் பிரிவு 45-இன் கீழ் விசாரணைக்கு உதவுவதற்காக புதன்கிழமை முதல் மூன்று நாட்களுக்கு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அஸஹர் கூறினார்.
“விசாரணை இன்னும் ஆரம்ப கட்டத்தில் உள்ளது, மேலும் சம்பந்தப்பட்ட நபர்களைக் காவல்துறையினர் அடையாளம் கண்டு அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்து வருகின்றனர்,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
மார்ச் 12 அன்று செரம்பானில் ஆறாம் வகுப்பு மாணவர்கள் சம்பந்தப்பட்ட ஒரு தகராறு குறித்து காவல்துறைக்கு ஏற்கனவே ஒரு புகார் வந்துள்ளது.
குண்டர் கும்பல்களுடன் தொடர்புள்ள வெளியாட்கள், மாணவர்களை ஒரு சட்டவிரோதக் குழுவில் சேருமாறு தூண்ட முயற்சிப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
“இந்தப் பிரச்சினை சமூகத்தில், குறிப்பாக மாணவர்களிடையே பரவாமல் தடுப்பதை உறுதி செய்யும் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், மேலதிக விசாரணைக்காகவும், 1966 ஆம் ஆண்டு சங்கங்கள் சட்டத்தின் பிரிவு 45-இன் கீழ் காவல்துறை ஒரு விசாரணை அறிக்கையைத் தொடங்கியுள்ளது,” என்று அவர் கூறினார்.
-fmt
