(கோகி கருணாநிதி)
ஜோகூர் பாரு:
ஜோகூர் மாநிலத்தின் 56 சட்டமன்றத் தொகுதிகளிலும் வேட்புமனுத் தாக்கல் நிகழ்வுகள் எந்தவித அசம்பாவிதங்களுமின்றி அமைதியாகவும் சுமுகமாகவும் நடைபெற்றிருப்பது, மாநிலத்தில் ஜனநாயகமும் நல்லிணக்கமும் தொடர்ந்து வலுப்பெற்று வருவதற்கான சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளதாக ஜோகூர் மந்திரி பெசாரும், தேசிய முன்னணி ஜோகூர் தலைவர் டத்தோ ஓன் ஹாஃபிஸ் காசி தெரிவித்தார்.
பெர்லிங் சட்டமன்றத் தொகுதி பாரிசான் நேஷனல் வேட்பாளர் ஆர். பன்னீர்செல்வத்துடன் புக்கிட் சௌஜானா அடுக்குமாடி குடியிருப்பில் நடைபெற்ற மக்களுடனான சந்திப்பு நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், வேட்புமனுத் தாக்கல் நாளில் மாநிலம் முழுவதும் பாரிசான் நேஷனலுக்கு மக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு மிகவும் ஊக்கமளிப்பதாகக் கூறினார்.


குறிப்பாக கெம்பாஸ், லார்கின் உள்ளிட்ட பகுதிகளில் நேரில் கண்ட வரவேற்பும், மற்ற 54 தொகுதிகளில் இருந்து கிடைத்த தகவல்களும் மக்களின் ஆதரவு தொடர்ந்து அதிகரித்து வருவதை வெளிப்படுத்துவதாக அவர் தெரிவித்தார்.
பாரிசான் நேஷனலின் தேர்தல் அறிக்கை என்பது புதிய வாக்குறுதிகளின் தொகுப்பல்ல என்றும், 2022ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ‘மாஜு ஜோகூர்’ திட்டத்தின் தொடர்ச்சியே தற்போதைய தேர்தல் அறிக்கை என்றும் ஓன் ஹாஃபிஸ் விளக்கினார்.
மக்களுக்கு வழங்கப்பட்ட *பாண்டுவான் காசிஹ் ஜோகூர் (BKJ), இளைஞர்களுக்கான திட்டங்கள், வீட்டு வசதி மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும், முன்பு ‘செமாராக் ஜோகூர்’ திட்டத்தை செயல்படுத்தியதைப் போல, மீண்டும் மக்கள் ஆணை கிடைத்தால் புதிய கட்ட நடவடிக்கைகளையும் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.


அதேவேளை, வெறும் அறிவிப்புகளை வெளியிடுவது மட்டுமே போதாது; அவை எப்போது நடைமுறைக்கு வரும் என்பதையே மக்கள் தற்போது எதிர்பார்க்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
குறிப்பாக *எலிவேட்டட் ஆர்டிஎஸ், சுல்தான அமீனா2 மருத்துவமனைத் திட்டம், பாசிர் கூடாங் மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் காலிப்பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக மத்திய அரசாங்கம் தெளிவான காலக்கெடுவை அறிவிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
“அறிவிப்புகளை வெளியிடுவது எளிது. ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்துவதில்தான் ஒரு தலைவரின் அர்ப்பணிப்பும் நேர்மையும் வெளிப்படும். மக்கள் இப்போது வாக்குறுதிகளை அல்ல, செயல்பாட்டையே மதிப்பிடுகின்றனர்,” என்று அவர் கூறினார்.
வரும் நாட்களில் தேர்தல் பிரச்சாரத்தின் வேகத்தை மேலும் அதிகரிக்கும் வகையில், பாரிசான் நேஷனல் தொடர்ந்து மக்களை நேரில் சந்தித்து அவர்களின் கருத்துகளையும் தேவைகளையும் அறிந்து கொள்ளும் பணியை முன்னெடுக்கும் என்றும் ஓன் ஹாஃபிஸ் தெரிவித்தார்.



