மும்பை விமான நிலையத்தில் இரண்டு விமானங்கள் மிக குறைந்த இடைவெளியில் ஓடுபாதையில் ஓடிச் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜா பன்னாட்டு விமான நிலையத்தில், நேற்று இரண்டு விமானங்கள் ஓடுதளத்தில் மிகவும் அபாயகரமான முறையில் ஒன்றையொன்று நெருங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தூரிலிருந்து வந்த IndiGo 6E 6053 விமானம் மற்றும் திருவனந்தபுரத்திற்கு புறப்பட்ட Air India AI657 விமானம் ஆகிய இரண்டு விமானங்களும் ஓடுதளத்தில் வெறும் 509 மீட்டர் இடைவெளி தூரத்தில் சென்றதால் விமான குழுக்களிடையே பதட்டம் அதிகரித்தது. இந்த சம்பவம் குறித்து இந்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) விசாரணை மேற்கொண்டு வருகிறது.
மேலும், இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட வான் போக்குவரத்து கட்டுப்பாட்டாளரை தற்காலிகமாக பணியில் இருந்து விலக்கியுள்ளது. பாதுகாப்பு நடைமுறைகளின்படி, தரை இறங்கும் விமானம் மற்றும் புறப்படும் விமானம் இடையே பாதுகாப்பான இடைவெளி இருப்பதை உறுதி செய்ய வேண்டியது வான் போக்குவரத்து கட்டுப்பாட்டாளரின் கடமை. ஆனால், இந்த சம்பவத்தில் இந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை என தெரிகிறது.
எவ்வாறாயினும், வான் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் சங்கம், வானிலை சாதகமாக இருந்ததாலும், தரை இறங்கும் மற்றும் புறப்படும் செயல்பாடுகள் பாதுகாப்பாக மேற்கொள்ளப்பட்டதாலும் விமானங்கள் மிகவும் அருகில் வருவதற்கான ஆபத்து இல்லை என்று வாதிட்டு வருவதாக தெரியவந்துள்ளது.


