Last Updated:
500 மில்லியன் பயனர்கள் என்பது அமெரிக்கா, யுனைடெட் கிங்டம் மற்றும் பிரான்ஸ் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த மக்கள்தொகையை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
தொலைத்தொடர்பு துறையில் 9வது ஆண்டு நிறைவு செய்யும் வேளையில் இன்று 500 மில்லியன் பயனர்களைத் தாண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை எட்டியதாக ஜியோ நிறுவனம் பெருமிதம் தெரிவித்துள்ளது.
இந்த குறிப்பிடத்தக்க சாதனை மூலம் உலகின் மிகப்பெரிய மொபைல் டேட்டா நெட்வொர்க்காக ஜியோ தனது நிலையை உறுதிப்படுத்தியுள்ளது. ஜியோவின் 500 மில்லியன் பயனர்கள் என்பது அமெரிக்கா, யுனைடெட் கிங்டம் மற்றும் பிரான்ஸ் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த மக்கள்தொகையை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மைல்கல்லை எட்டியது தொடர்பாக பேசியிருக்கும் ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட் தலைவர் ஆகாஷ் அம்பானி, “ஜியோவின் 9வது ஆண்டு விழாவில், 500 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர் என்பதில் நான் உண்மையிலேயே பெருமை கொள்கிறேன். ஒரே நாட்டிற்குள் இந்த அளவை எட்டுவது, ஜியோ அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக எவ்வளவு ஆழமாக மாறியுள்ளது என்பதை பிரதிபலிக்கிறது.
இதனை சாத்தியமாக்கிய ஒவ்வொரு ஜியோ பயனருக்கும் நான் தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். உங்கள் நம்பிக்கையும் ஆதரவும் ஒவ்வொரு நாளும் எங்களுக்கு ஊக்கமளிக்கின்றன. இந்தப் பயணத்தை இன்னும் உறுதியுடன் எதிர்நோக்குவோம். சிறந்த தொழில்நுட்பத்தை நூற்றுக்கணக்கான மில்லியன் இந்தியர்களின் கைகளில் கொண்டு வந்து, அதை எளிதில் அணுகக்கூடியதாக மாற்றுவோம்.” என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, 9வது ஆண்டு நிறைவையும் கொண்டாடும் வகையில் ஜியோ அதன் பயனர்களுக்கு சில சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி, செப்டம்பர் 5 முதல் 7 வரை அனைத்து 5G ஸ்மார்ட்போன் பயனர்களுக்கும் அவர்களின் தற்போதைய பிளான் இல்லாமல் 5G டேட்டாவை முற்றிலும் இலவசமாக அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், ரூ.39 டேட்டா ஆட்-ஆனைத் தேர்வுசெய்யும், அனைத்து 4G ஸ்மார்ட்போன் பயனர்களும் அன்லிமிடெட் 4G டேட்டா வழங்கப்படுகிறது.
செப்டம்பர் 5 முதல் அக்டோபர் 5 வரைக்கான ரூ. 349 பிளான் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு அன்லிமிடெட் 5G டேட்டா உடன் ஜியோ ஃபைனான்ஸ் வழங்கும் ஜியோ கோல்ட் 2% கூடுதல் டிஜிட்டல் தங்கம், ஹாட்ஸ்டார் 1 மாத சந்தா மற்றும் பல வழங்கப்படுகிறது. அதேபோல் இதே காலகட்டத்தில் ரூ.1200க்கு பிளான் எடுப்பபவர்களுக்கு 2 மாத புதிய ஜியோஹோம் சேவை இணைப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ரூ. 349க்கு 12 முறை சரியான நேரத்தில் மாதாந்திர ரீசார்ஜ் செய்தால் 13வது மாதம் அதே பிளான் இலவசமாக அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
September 03, 2025 10:13 PM IST


