Last Updated:
அசாமில் 50க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு சிசேரியன் செய்த போலி மருத்துவர் புலோக் மலாக்கர் 10 ஆண்டுகளுக்குப் பின் கைது செய்யப்பட்டார்.
அசாமில் 50க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு சிசேரியன் செய்து பிரசவம் பார்த்த போலி மருத்துவர் 10 ஆண்டுகளுக்குப் பின் போலீசாரிடம் சிக்கியுள்ளார்.
அசாமில் உள்ள ஸ்ரீபூமியைச் சேர்ந்தவர் புலோக் மலாக்கர். இவர் சில்சார் பகுதியில் உள்ள இரு தனியார் மருத்துவமனைகளில் கடந்த 10 ஆண்டுகளாக கைனகாலஜிஸ்ட்டாக பணியாற்றி வந்துள்ளார். இவர் இதுவரை சுமார் 50 கர்ப்பிணிப் பெண்களுக்கு பிரசவம் பார்த்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதுவும் சிசேரியன் பிரசவங்கள். பிரசவம் என வரும் அனைத்து கர்ப்பிணிப் பெண்களிடமும் தனது சிசேரியன் திறமையைக் காட்டி அனுபவத்தை வளர்த்துக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் தான் அவர் ஒரு போலி மருத்துவர் என்பது கண்டறியப்பட்டுள்ளது. கடைசியாக ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு சிசேரியன் அறுவை சிகிச்சை செய்யும் போது ஆபரேஷன் தியேட்டரில் வைத்தே அவர் கைது செய்யப்பட்டார். புலோக் ஒரு போலி மருத்துவர் என காவல்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல்களை சிலர் அனுப்பி வைத்துள்ளனர். அந்த தகவலின் பேரில் அவரது ஆவணங்களை பெற்று போலீசார் ஆய்வு செய்தனர்.
அப்போது அவரது சான்றிதழ்கள் அனைத்தும் போலியானது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஒடிசா மருத்துவக் கல்லூரியில் படித்தது போல் அந்த சான்றிதழ்களை அவர் உருவாக்கியிருந்தார். 10 ஆண்டுகளாக யாருக்கும் சந்தேகம் வராமல் அசாமில் வெற்றிகரமான மருத்துவராக வலம் வந்துள்ளார் புலோக் மலாக்கர். மருத்துவ அறிவு சற்றும் இன்றி, 50 பெண்களுக்கு சிசேரியன் செய்துள்ளார் என்ற அதிர்ச்சித் தகவலும் வெளியானதால் பொதுமக்கள் அதிர்ந்து போயுள்ளனர்.
அவரை கைது செய்துள்ள போலீசார் ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இத்தகைய நபர்கள் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள நடுத்தர வர்க்கக் குடும்பங்களை குறிவைத்து, அவர்களுக்கு மருத்துவ சேவைகளை முன் வந்து செய்வதாக காட்டிக் கொள்வதால், பொதுமக்களும் எவ்வித சந்தேகமும் இன்றி ஏற்றுக் கொள்கின்றனர் இவர்களைப் போன்ற போலி மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இந்த ஆண்டு ஜனவரி முதல், போலி மருத்துவர்களைப் பிடிப்பதற்கென்றே அசாம் அரசு சிறப்பு நடவடிக்கையை தொடங்கியுள்ளது.
August 06, 2025 6:49 PM IST


