பீத்தாஸ்:
கடந்த ஜனவரி 4-ஆம் தேதி முதல் காணாமல் போயிருந்த 105 வயது முதியவர், நேற்று காலை கம்போங் பொண்டோய் (Kampung Pondoi) அருகே உள்ள ஒரு சிற்றோடையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
ஜனவரி 3-ஆம் தேதி மாலை 4.11 மணியளவில் பக்கார் சம்பெலிட் (Bakar Sampelit) என்ற அந்த முதியவர், வீட்டில் இல்லாததைக் கண்ட குடும்பத்தினர், அவரைத் தேடினர். அவர் கிடைக்காததால் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
பின்னர் தேடுதல் மற்றும் மீட்புக் குழுவினர் (SAR), நேற்று காலை 10.52 மணியளவில் அவரது வீட்டிலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள ஓடையில் அவரது உடலைக் கண்டெடுத்தனர் என்று, கோத்தா மருடு மாவட்டப் போலீஸ் தலைவர் சூப்பரின்டெண்டன் சிமியுன் லோமுடின் கூறினார்.
உயிரிழந்த முதியவர் ‘டிமென்ஷியா’ (Dementia) எனும் மறதி நோயால் பாதிக்கப்பட்டவர். பலத்த மழை பெய்த நேரத்தில் அவர் வீட்டை விட்டு வெளியேறியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவர் பொதுவாக வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடப்பார் என்றும், பெரும்பாலும் அவராகவே திரும்புவார் அல்லது கிராம மக்கள் அவருக்கு உதவுவார்கள் என்றும் கூறப்பட்டது.
முதியவரின் உடல் குடும்ப உறுப்பினர்களால் அடையாளம் காணப்பட்ட பிறகு, பிரேதப் பரிசோதனைக்காக பீத்தாஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த வழக்கை போலீசார் தற்போது ஒரு ‘காணாமல் போன நபர்’ (Missing Person) புகாராக வகைப்படுத்தி முடிவுக்குக் கொண்டு வந்துள்ளனர்.




