புதுடெல்லி: வரும் நவம்பர் 9-ம் தேதி முதல் இந்தியாவுக்கு நேரடி விமான சேவை மீண்டும் இயக்கப்படும் என சீன நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் கரோனா தொற்று பரவல் காரணமாக சர்வதேச விமான சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது. அதே ஆண்டு மே மாதம் லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா மற்றும் சீன ராணுவம் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால், இருதரப்பு உறவில் விரிசல் ஏற்பட்டது. இதனால், கரோனாவுக்கு பிறகும் சீனாவுக்கு நேரடி விமான சேவை தொடங்கப்படவில்லை. கடந்த 5 ஆண்டுகளாக பக்கத்து நாடுகள் மூலமாகவே சீனாவுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இந்த சூழ்நிலையில் இரு நாடுகளுக்கிடையிலான உறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வரும் அக்டோபர் 26-ம் தேதி முதல் சீனாவுக்கு நேரடி விமான சேவை இயக்கப்படும் என மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் கடந்த 2-ம் தேதி அறிவித்தது. இதன்படி, இந்தியாவின் இண்டிகோ நிறுவனம்
5 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக கொல்கத்தா- குவாங்சு (சீனா) இடையே 26-ம் தேதி முதல் தினசரி விமான சேவையை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதுபோல, டெல்லி-குவாங்சு இடையே நவம்பர் 10-ம் தேதி முதல் விமான சேவை தொடங்கும் என அறிவித்துள்ளது.
இதுபோல, இந்த ஆண்டு இறுதிக்குள் சீனாவுக்கு நேரடி விமான சேவை இயக்கப்படும் என ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த சூழலில், ஷாங்காய்-டெல்லி இடையே நவ.9-ம் தேதி விமான சேவை (வாரத்துக்கு 3 நாள்) தொடங்கப்படும் என சீனாவைச் சேர்ந்த ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.