சென்னை: 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிவரும் செப்டம்பர் மாதம் ஹங்கேரியின் புடாபெஸ்டில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் இந்திய ஆடவர் அணியில் கிராண்ட் மாஸ்டர்களான தமிழகத்தை சேர்ந்த குகேஷ், பிரக்ஞானந்தா இடம் பெற்றுள்ளனர்.
இவர்களுடன் அர்ஜூன் எரிகைசி, விதித் குஜராத்தி, ஹரிகிருஷ்ணா பென்டலா ஆகியோரும் உள்ளனர். இதை அகில இந்திய செஸ் கூட்டமைப்பின் தலைவர் நித்தின் நரங் உறுதி செய்துள்ளார்.
18 வயதான குகேஷ் கடந்த ஏப்ரலில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். இதன் மூலம் அவர், உலக சாம்பியன் பட்டம் வெல்வதற்கான ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனுடன் விளையாடுவதற்கு தகுதி பெற்றார். இந்த ஆட்டம் வரும் நவம்பர் மாதம் சிங்கப்பூரில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கு சிறந்த முறையில் தயாராகுவதற்கு செஸ் ஒலிம்பியாட் போட்டி பயிற்சி களமாக குகேஷுக்கு அமையக்கூடும்.
செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்கும் இந்திய மகளிர் அணியில் ஹரிகா துரோணாவல்லி, வைஷாலி, திவ்யா தேஷ்முக், வந்திகா அகர்வால், தானியா சச்தேவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
கடந்த 2022-ம் ஆண்டு மகாபலிபுரத்தில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்த கிராண்ட் மாஸ்டர் கோனேரு ஹம்பிக்கு இம்முறை இடம் வழங்கப்படவில்லை.

&w=1200&resize=1200,675&ssl=1)