Tamilnadu
oi-Halley Karthik
சேலம்: மேட்டூர் அணையை முதலமைச்சர் விஜய் நேற்று முன்தினம் திறந்து வைத்தால். 45 நாட்களுக்கு அணை திறக்கப்பட்டிருக்கும் என்று சொல்லப்பட்ட நிலையில், தற்போது அணைக்கான நீர்வரத்து குறைந்திருக்கிறது. இதனால் தொடர்ந்து 45 நாட்களுக்கு அணை திறக்கப்படுமா? என்பது கேள்விக்குறியாக மாறியிருக்கிறது.
மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரை நம்பிதான் டெல்டாவில் பாசனம் நடைபெறுகிறது. இப்படி இருக்கையில் குறுவை சாகுபடிக்கு 100 நாட்களுக்கு திறக்கப்பட வேண்டிய அணை, வெறும் 45 நாட்களுக்கு மட்டும் திறந்தால்.. சரிப்பட்டு வராது என்று விவசாயிகள் விஜய்க்கு எதிராக கொந்தளித்திருந்தனர்.

இப்படி இருக்கையில், தற்போது அணைக்கான நீர்வரத்து குறைந்திருப்பதால், திட்டமிட்டபடி அணை 45 நாட்களுக்கு திறக்கப்படுமா? என்று விவசாயிகள் சந்தேகம் கிளப்பியிருக்கின்றனர். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த 3 நாட்களாக நீர்வரத்து 11,000 கனஅடியாக இருந்த நிலையில், தற்போது வினாடிக்கு 10,000 கனஅடியாக குறைந்திருக்கிறது. ஒகேனக்கலில் நிர் குறைந்தால்.. மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து குறையும். இது விவசாயிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
காரணம், குறுவை பயிரின் காலம் 120 நாட்கள். இப்பயிருக்கு குறைந்தபட்சம் 100 நாட்களுக்கு தண்ணீர் தேவை. இருப்பினும் 45 நாட்களுக்கு மட்டுமே மேட்டூர் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த குறைந்தபட்ச நீருடன்.. நிலத்தடி நீரையும் பயன்படுத்தி சில பகுதிகளில் விவசாயம் செய்ய திட்டமிட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. இந்த நேரத்தில் கர்நாடகாவிலிருந்து நீர்வரத்து குறைந்திருப்பது, மொத்த முதலீட்டையும் காலி செய்துவிடும் என்று விவசாயிகள் அச்சம் தெரிவித்திருக்கின்றனர்.
இப்போது அணையின் நீர் இருப்பு 54.89 டிஎம்சி ஆக இருக்கிறது. வினாடிக்கு 7,000 கனஅடி நீர் அணையிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறது. அப்படி எனில், ஒரு நாளைக்கு 0.6 டிஎம்சி அளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டிருக்கிறது. தற்போது அணையில் இருக்கும் நீரை வைத்து கணக்கிட்டால்.. அதாவது அணையின் நீர் தேவைக்கு 10 டிஎம்சியை வைத்துக்கொண்டு.. மீதமுள்ள 44.89 தண்ணீர் 74 நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கிறது. ஆக எப்படி பார்த்தாலும் டெல்டா மாவட்ட விவசாயிகளின் நிலைமை மோசமாகத்தான் இருக்கிறது.
இந்த நிலைமையை சரி செய்ய வேண்டும் எனில், கர்நாடக அரசிடமிருந்து உறுதியாக தமிழகத்திற்கான நீரை முதலமைச்சர் விஜய் வாங்கி பெற வேண்டும். அப்படி செய்யவில்லை எனில்.. இந்த ஆண்டு குறுவை பாதிக்கப்பட்டு.. அரிசியின் விலையும் அதிகரித்துவிடும் என்று விவசாயிகள் எச்சரித்திருக்கின்றனர். தமிழகத்திற்கான நீர் வரத்து குறைந்தது.. தற்போது விஜய்க்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.

