நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 இடங்களில் வெற்றிபெற்று, பிரதமர் மோடி 3வது முறையாக ஆட்சியத்துள்ளார். ஆனால், பாஜக கூட்டணி பெரிதும் எதிர்பார்த்த உத்தரபிரதேசம் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களில் சரிவை சந்தித்துள்ளது. குறிப்பாக, உத்தரபிரதேசத்தில் உள்ள 80 இடங்களில் பாஜக வெறும் 33 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. அதே நேரத்தில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள சமாஜ்வாதி கட்சி 37 இடங்களை கைப்பற்றியது.
மகாராஷ்டிராவிலும் பாஜக கூட்டணி கடும் சரிவை சந்தித்துள்ளது. அங்குள்ள 48 தொகுதிகளில் பாஜக வெறும் 9 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. அத்துடன், பாஜக உடன் கூட்டணி வைத்திருந்த ஏக்நாத் ஷிண்டே சிவசேனா 7 இடங்களிலும், அஜித் பவார் என்சிபி 1 இடத்திலும் வெற்றிபெற்றன. அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சி 13 இடங்களிலும், அதனுடன் கூட்டணி வைத்திருந்த உத்தவ் தாக்கரே சிவசேனா 9 இடங்களிலும், சரத்பவார் என்சிபி 8 இடங்களிலும் வெற்றிபெற்றன. இதன்மூலம் மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணிக்கு 17 இடங்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு 30 இடங்களும் கிடைத்தன.
மகாராஷ்டிராவில் அதிக இடங்களில் வெற்றிபெறுவோம் என எதிர்பார்த்த பாஜகவுக்கு கடும் அடி விழுந்ததால், அதிருப்தி அடைந்த அஜித் பவார் என்சிபி எம்.எல்.ஏ.க்கள் சரத்பவார் பக்கம் தாவியுள்ளனர். இதேபோல், ஏக்நாத் ஷிண்டே தரப்பிலும் அதிருப்தி வெடித்துள்ளது. அத்துடன், மத்திய அமைச்சர் இடங்களிலும் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா, அஜித் பவார் என்சிபி கட்சிகளுக்கு போதுமான பிரதிநிதித்துவம் தரப்படவில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது. இந்நிலையில், பாஜக மற்றும் பிரதமர் மோடியின் பிரச்சாரமே, மகாராஷ்டிராவில் தேர்தல் தோல்விக்கு காரணம் என ஏக்நாத் ஷிண்டே குற்றஞ்சாட்டியுள்ளார்.
Also Read :
வயநாடு vs ரேபரேலி.. ராஜினாமா செய்ய போகும் தொகுதி எது? – ராகுல் காந்தி சொன்ன விளக்கம்!
இது குறித்து பேசிய அவர், “மக்களவைத் தேர்தலில் 400 இடங்களுக்கும் அதிகமாக வெற்றிபெறுவோம் என்று பிரதமர் மோடி உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்தனர். அத்துடன், 400க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெற்றால், அரசியல் சாசனத்தை மாற்றி எழுதுவோம் என்றும் பிரச்சாரம் செய்தனர். இந்த பிரச்சாரம் மக்கள் மனதில் எதிர்மறை எண்ணங்களையும், சந்தேகத்தையும் உருவாக்கிவிட்டது. பாஜக 400 இடங்களுக்கு மேல் வெற்றிபெற்றால், அரசியல் சாசனத்தை மாற்றி எழுதி, இட ஒதுக்கீட்டை பறித்து விடுவார்கள் என மக்கள் நம்பினர். இதை எதிர்க்கட்சிகளும் கையில் எடுத்து தீவிரமாக பிரச்சாரம் செய்தன. இதுதான், மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி தோல்வியடைய முக்கிய காரணம்” என ஏக்நாத் ஷிண்டே விமர்சித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் முடிவுக்கு பிறகு, தொடர்ந்து பாஜகவுக்கு எதிராக ஏக்நாத் ஷிண்டே கருத்து தெரிவித்து வருகிறார். எனவே, விரைவில் அவர் உத்தவ் தாக்கரே உடன் சேர்ந்துவிடுவாரோ என்ற கருத்து மகாராஷ்டிர அரசியலில் உலா வரத் தொடங்கியுள்ளது.
.
&w=750&resize=750,375&ssl=1)
