கோத்தா திங்கி:
நான்கு சிறுவர்கள் நீரில் மூழ்கி விபத்துக்குள்ளான தஞ்சோங் லொம்பாட் கடற்கரை, பொதுமக்கள் குளிப்பதற்கான பகுதி அல்ல என்றும், அது மீனவர்கள் மீன்பிடிக்கும் பகுதி என்றும் பெனாவார் சட்டமன்ற உறுப்பினர் (ADUN) ஃபௌசியா மிஸ்ரி தெளிவுபடுத்தியுள்ளார்.
சம்பவ இடத்திற்கு இன்று வருகை தந்த சட்டமன்ற உறுப்பினர் ஃபௌசியா மிஸ்ரி, அப்பகுதியில் எச்சரிக்கைப் பலகைகள் வைக்கப்படவில்லை எனக் எழுந்த விமர்சனங்களுக்குப் பதிலளித்தார்.” இந்த இடம் படகுகள் நிறுத்துவதற்கும் மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளுக்கும் மட்டுமே பயன்படுத்தப்படும் பகுதியாகும். இங்கு முறையான கட்டுப்பாடுகளோ அல்லது எச்சரிக்கைப் பலகைகளோ இல்லாததால் பொதுமக்கள் பலர் இங்குப் பொழுதுபோக்கிற்காக வருகை தருகின்றனர். ஆனால், அடிப்படையில் இங்கு நீரில் இறங்கிக் குளிப்பதற்கு அனுமதி இல்லை’ என்று அவர் சொன்னார்.
இச்சம்பவத்தில் இதுவரை கண்டெடுக்கப்படாத 3 சிறுவர்களின் குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்ட ஃபௌசியா, அங்கு முதன்முறையாக இத்தகைய உயிரிழப்புச் சம்பவம் நிகழ்ந்திருப்பது மிகுந்த அதிர்ச்சியளிப்பதாகக் கூறினார்.
இன்று 2-வது நாளாகத் தொடரும் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கு உதவும் வகையில், ‘மத்ரஸாத்துல் குர்ஆன் அர்-ரெதா’வைச் சேர்ந்த 7 தஹ்பீஸ் (Tahfiz) மாணவர்கள் கடற்கரையிலேயே பாங்கு ஓதி , சிறப்புத் தொழுகை நடத்திப் பிரார்த்தனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.



