Last Updated:
மருத்துவர் உமர் கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் துருக்கி சென்றதாகவும் அங்கு பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த சிலரை சந்தித்ததாகவும் அதிர்ச்சித் தகவலை உளவுத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் கார் குண்டு வெடிப்பு நிகழ்த்திய கும்பல் மேலும் 32 கார்களில் குண்டுகளை நிரப்பி வெடிக்க வைக்க சதித்திட்டம் தீட்டியது அம்பலமாகியுள்ளது.
டெல்லியில் கடந்த திங்கட்கிழமை மாலை செங்கோட்டை அருகே போக்குவரத்து சிக்னலில் நின்ற கார் வெடித்த சதிச் செயலில் வீட்டுக்குத் திரும்பக் காத்திருந்த 13 பேர் உடல் சிதறி பலியாகினர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு பதிலடி தர ஜெய்ஷ் இ முகம்மது அமைப்புடன் தொடர்புடைய மெத்தப் படித்த மருத்துவர்கள் பலர் ஒன்றுதிரண்டு தலைநகர் டெல்லியை தகர்க்கத் திட்டமிட்டனர். ஆனால் இச்சதிச் செயல் தடுக்கப்பட ஒரு போஸ்டர் காரணமாக அமைந்தது. கடந்த அக்டோபர் 27ம் தேதி காஷ்மீரில் இந்தியாவுக்கு எதிராக போஸ்டர் ஒட்டிய மருத்துவர் அதீல், உத்தரப்பிரதேச மாநிலம் சஹாரான்பூரில் கைது செய்யப்பட்டார்.
அவர் அளித்த தகவலின் அடிப்படையில், டெல்லியில் வெடிகுண்டு சம்பவம் நிகழ்ந்த திங்கட்கிழமையன்று காலை ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த மருத்துவர் முஜாமிலை ஹரியானா மாநிலம் பரீதாபாதில் காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஏகே ரக துப்பாக்கிகள் 350 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. காஷ்மீரில் இவர்களுக்குத் தொடர்புடைய சில இடங்களில் நடந்த சோதனையில் 2900 கிலோ வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இவ்வழக்கில் மருத்துவர் முஜாமிலின் நெருங்கிய தோழியும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த மருத்துவருமான ஷாகீன் உள்பட 4 மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் உத்தரப்பிரதேசத்தில் ஹாபூரில் இருந்து மருத்துவப் பேராசிரியர் பாரூக் மற்றும் கான்பூரில் இருந்து இதயநோய் மருத்துவம் பயிலும் முகம்மது ஆரிப் மிர் என்பவரும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லி கார் வெடிப்பை நிகழ்த்தி உயிரிழந்த மருத்துவர் உமர் மற்றும் இந்தக் முஜாமில் உள்ளிட்ட மருத்துவர்கள் கும்பல் நிகழ்த்தவிருந்த பெரும் சதிச்செயலை உளவுத்துறையினர் தற்போது கண்டறிந்துள்ளனர். டெல்லி கார் வெடிப்பில் பயன்படுத்தப்பட்ட ஹூண்டாய் ஐ20 காரைப் போலவே, குண்டு வெடிப்புக்கு ஏற்ப மாற்றங்கள் செய்யப்பட்ட மற்றொரு ஹூண்டாய் ஐ20 மற்றும் ஈகோ ஸ்போர்ட் கார்களை காவல்துறையினர் கண்டுபிடித்து பறிமுதல் செய்துள்ளனர்.
இதுபோல் மேலும் 32 கார்களில் வெடி குண்டுகளை நிரப்ப அவற்றை அதற்கு ஏற்ப மாற்றி வந்த அதிர்ச்சித் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த 32 கார்களை டெல்லியில் நான்கு இடங்களில் ஒரே நேரத்தில் வெடிக்க வைத்து தலைநகரையே நிலைகுலையச் செய்ய திட்டமிட்டருந்ததும் தற்போது அம்பலமாகியுள்ளது. இதில், தற்போது கைதாகியுள்ள மருத்துவர்கள் முஜாமில், அதீல், ஷாகீன் மற்றும் குண்டு வெடிப்பில் பலியான உமர் ஆகியோருக்குத் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. காவல்துறையினர் தகுந்த நேரத்தில் மருத்துவர்கள் அதீல், முஜாமிலை கைது செய்ததன் மூலம் இந்த சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.
மேலும் டெல்லி செங்கோட்டையில் கார் வெடிப்பை நிகழ்த்திய உமருக்கு சர்வதேச பயங்கரவாத அமைப்பினருடன் நேரடி தொடர்பு இருந்ததும் தெரியவந்துள்ளது. மருத்துவர் உமர் கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் துருக்கி சென்றதாகவும் அங்கு பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த சிலரை சந்தித்ததாகவும் அதிர்ச்சித் தகவலை உளவுத்துறையினர் தெரிவித்துள்ளனர். அவர் அங்கு 2 வாரங்கள் தங்கி 14 பேரை சந்தித்துள்ளார் என்ற விவரமும் கிடைத்துள்ளது.
டெல்லி குண்டு வெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் அனைவரும் மருத்துவர்கள் என்பதும் ஹரியானாவில் உள்ள அல் ஃபலா மருத்துவப் பல்கலைக்கழகத்தில் பயின்றவர்கள் என்பதும் அனைவரையும் திடுக்கிடச் செய்துள்ளது. இதனால் அல் ஃபலா மருத்துவப் பல்கலைக்கழகத்தின் உறுப்பினர் அங்கீகாரத்தை இந்திய பல்கலைக்கழகங்கள் அமைப்பு, சஸ்பெண்ட் செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Delhi,Delhi,Delhi
November 14, 2025 1:57 PM IST
“32 கார்களில் குண்டுகளை நிரப்பி வெடிக்க வைக்க சதி” – டெல்லி செங்கோட்டை சம்பவத்தில் அதிர்ச்சி தகவல்!


