ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இரண்டாவது ஆட்டமாக இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ஹைதராபாத்தில் மாலை 3:30 மணி அளவில் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
இதையடுத்து ஹைதராபாத் அணியின் தொடக்க வீரராகக் களமிறங்கிய அபிஷேக் சர்மா – ட்ராவிஸ் ஹெட் இணை வழக்கம் போல அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தது. இருவரும் முதல் விக்கெட்டுக்கு 45 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 24 ரன்கள் எடுத்திருந்தபோது அபிஷேக் சர்மா ஆட்டம் இழந்து வெளியேறினார்.
அடுத்து இணைந்த இஷான் கிஷன் – ஹெட் இணை அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட்டது. ஒவ்வொருவரிலும் சிக்ஸர், பவுண்டரிகள் பறந்ததால் ஸ்கோர் ஏகத்துக்கும் தொடங்கியது. 31 பந்துகளில் 3 சிக்ஸர், 9 பவுண்டரியுடன் 67 ரன்கள் எடுத்திருந்த ட்ராவிஸ் ஹெட் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த நிதீஷ் ரெட்டி 30 ரன்கள் சேர்க்க, ஹென்ரிக் க்ளாசென் 14 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோர் உயர உதவினார்.
தொடர்ந்து அதிரடியாக ரன்கள் சேர்த்த இஷான் கிஷன் 47 பந்துகளில் 6 சிக்ஸர், 11 பவுண்டரியுடன் 106 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்றார். 20 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் எடுத்தது.
ஐபிஎல் வரலாற்றில் முன்னதாக இதே சன்ரைசர்ஸ் அணி 287 ரன்கள் எடுத்ததுதான் ஒரு இன்னிங்ஸில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. இதனை இன்று ஹைதராபாத் முறியடிக்கும் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்ட நிலையில், கடைசி ஓவரில் ரன் குவிப்பு வேகம் குறைந்ததால் சாதனையை முறியடிக்க முடியவில்லை.
இதையடுத்து 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்கள் களமிறங்கினர். அந்த அணியின் யஷஸ்வி ஜெயஸ்வால் 1 ரன்னிலும், கேப்டன் ரியான் பராக் 4 ரன்கள் மட்டுமே எடுத்து இழந்தனர். அடுத்து வந்த நிதீஷ் ராணா 11 ரன்னில் வெளியேறினார். 4.1 ஓவரில் 50 ரன்கள் எடுத்திருந்தபோது அந்த அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதன் பின்னர் இணைந்த சஞ்சு சாம்சன் மற்றும் துருவ் ஜூரல் இணை அதிரடியாக ரன்கள் சேர்த்தது. இருவரும் நான்காவது விக்கெட்டுக்கு 111 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். சாம்சன் 66 ரன்களும், ஜூரல் 70 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர்.
அதன் பின்னர் இணைந்த ஷிம்ரன் ஹெட்மயர், சுபம் தூபே இணை சிக்ஸர், பவுண்டரியாக விளாசி அணிக்கு நம்பிக்கை கொடுத்தது. இருவரும் 6-ஆவது விக்கெட்டுக்கு 80 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இருப்பினும் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் அணி 242 ரன்கள் மட்டுமே எடுத்து 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இந்த மேட்ச்சில் மட்டும் மொத்தம் 30 சிக்சர்களும், 528 ரன்களும் எடுக்கப்பட்டுள்ளன.
தற்போது 2 ஆட்டங்கள் முடிவுற்ற நிலையில் பாயிண்ட்ஸ் டேபிளில் ஹைதராபாத் அணி முதல் இடத்திலும், பெங்களூரு அணி இரண்டாம் இடத்திலும் உள்ளன.
March 23, 2025 8:15 PM IST

