விவசாயிகளுக்கு ரூ.20,000 கோடி நிதி விடுவிப்பு
: விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தின்கீழ் 17}ஆவது தவணையாக ரூ.20,000 கோடியை விடுவிப்பதற்கான கோப்பில் பிரதமர் நரேந்திர மோடி முதல் கையொப்பமிட்டார்.
இந்த நிதியின் மூலம் நாடு முழுவதும் 9.3 கோடி விவசாயிகள் பலனடைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வருகை தந்த மோடி, தனது இருக்கையில் அமர்ந்து பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர், பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின்கீழ், 17-ஆவது தவணையாக ரூ.20,000 கோடியை விடுவிப்பதற்கான கோப்பில் முதல் கையொப்பமிட்டார்.
“விவசாயிகளின் நலனைக் காக்க எனது அரசு உறுதிபூண்டுள்ளது. எனவே, விவசாயிகள் நலன் தொடர்பான கோப்பில் முதல் கையொப்பமிட்டுள்ளேன். வரும் காலங்களில் விவசாயிகள் மற்றும் வேளாண் துறைக்காக மேலும் பணியாற்ற விரும்புகிறோம்’ என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
2019, பிப்ரவரியில் தொடங்கப்பட்ட பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தின்கீழ் தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி மூன்று தவணைகளாக வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் விமர்சனம்: “மக்களவைத் தேர்தல் காரணமாக, ஒரு மாதம் தாமதம் ஏற்பட்ட நிலுவை நிதியை விடுவிக்கவே, மோடி இப்போது கையொப்பமிட்டுள்ளார்; மாறாக, விவசாயிகளுக்கான எந்த சிறப்பு நடவடிக்கையையும் அவர் மேற்கொள்ளவில்லை.
உண்மையிலேயே விவசாயிகள் மீது அவருக்கு அக்கறை இருந்தால், விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ அங்கீகாரம் வழங்குவதோடு, விவசாயக் கடன்களை ரத்து செய்ய வேண்டும்’ என்று காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தியுள்ளார்.

