ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 63 வது லீக் ஆட்டம் கொல்கத்தா மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால் தொடர் மழை பெய்த காரணத்தால் இந்த போட்டியில் டாஸ் கூட சுண்டப்படாமல் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து இரு அணிகளும் தலா ஒரு புள்ளிகளை பெற்றன. இதன் அடிப்படையில் 19 புள்ளிகளை பெற்றுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. கொல்கத்தா அணி குவாலிஃபையர் 1 சுற்றுக்கு முன்னேறி இருப்பதால் இன்னும் ஒரே ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
குவாலிஃபையர் சுற்றில் தோல்வி அடைந்தாலும் கொல்கத்தா அணிக்கு இன்னொரு வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் தரவரிசை பட்டியலில் 2, 3, 4 இடங்களை பிடிப்பதற்கு 6 அணிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. தரவரிசையில் ராஜஸ்தான் 16 புள்ளிகள் உடன் 2-ஆவது இடத்திலும், சென்னை 14 புள்ளிகளுடன் 3-ஆவது இடத்திலும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் 4-ஆவது இடத்திலும் உள்ளன.
பெங்களூரு அணி 5-ஆம் இடத்திலும், டெல்லி 6-ஆவது இடத்திலும், லக்னோ 7-ஆவது இடத்தில் உள்ளன. மற்ற அணிகளான குஜராத், மும்பை, பஞ்சாப் ஆகியவை தொடரிலிருந்து வெளியேறியுள்ளன. இன்று டெல்லியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற உள்ளது.
இந்த போட்டியில் தோல்வியடையும் அணி ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறும். இதே போன்று வரும் 18ம் தேதி சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் பெங்களூரு தோல்வியடைந்தால் அந்த அணியும் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறும். தற்போதைய சூழலில் ராஜஸ்தான் அணி பிளே ஆஃப் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுகிறது.
.
&w=750&resize=750,375&ssl=1)
