Last Updated:
3 ஆண்டுகள் கடின உழைப்பின் பலனாக தேசிய அளவில் வெற்றி பெற்ற தஞ்சை மாணவனை, சோழ தேச மக்கள் கொண்டாடினர்.
ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியில் நடைபெற்ற 15 வயதிற்குட்பட்டோருக்கான 15வது தேசிய வில்வித்தைப் போட்டியில், தமிழ்நாடு அணி சிறப்பாக விளங்கி வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது.
இந்தப் போட்டியில் தமிழக அணிக்காக பங்கேற்ற தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவர் பிரேம்நாத் 40 மீட்டர் பிரிவில் திறமையாக விளையாடி மாநிலத்திற்குப் பெருமை சேர்த்தார். அவரது துல்லியமான குறிவைத்த திறமை மற்றும் விடாமுயற்சி, அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
வெள்ளிப் பதக்கம் வென்று தாயகமான தஞ்சாவூருக்கு திரும்பிய மாணவர் பிரேம்நாத்துக்கு பொதுமக்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் உற்சாகமான வரவேற்பு அளித்தனர். பலரும் அவரை பாராட்டி வாழ்த்துகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து பேசிய பிரேம்நாத், “கடந்த மூன்று ஆண்டுகளாக வில்வித்தை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆரம்பத்திலிருந்தே என் பெற்றோர் அளித்த ஊக்கமே எனக்கு பெரிய பலமாக இருந்தது. மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்கள் வென்றுள்ளேன். தற்போது தேசிய அளவில் வெள்ளிப் பதக்கம் வென்றது பெருமையாக உள்ளது. இனி வரும் போட்டிகளில் தொடர்ந்து சிறந்து விளங்கி, இந்திய அளவில் முதலிடம் பிடிக்க வேண்டும் என்பதே என் இலக்கு” எனத் தெரிவித்தார். இந்த வெற்றி, இளம் விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமாகவும், தமிழகத்தின் விளையாட்டு திறனை வெளிப்படுத்தும் சிறந்த எடுத்துக்காட்டாகவும் பார்க்கப்படுகிறது.
